ரத்த தானம் செய்ய அனைவரும் முன்வர வேண்டும்: முதல்வர் மு.க. ஸ்டாலின்!

ரத்த தானத்தில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக உள்ளது என்றும் 100 சதவீத இலக்கை எட்ட அனைவரும் ரத்த தானம் செய்ய முன்வர வேண்டும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

நாளை(அக்டோபர். 1) ரத்த தான நாளையொட்டி முதல்வர் மு.க. ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

ரத்த தானம் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் திங்கள் முதல் நாள் தேசிய தன்னார்வ ரத்த தான தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டிற்கான தேசிய தன்னார்வ ரத்த தான தினத்தின் கருப்பொருள் ‘தொடர்ந்து ரத்தம், பிளாஸ்மா தானம் செய்வோம், வாழ்வை பகிர்ந்து கொள்வோம்’ என்பதாகும்.

அறிவியலில் ஏராளமான கண்டுபிடிப்புகள் நிகழ்ந்திருந்தாலும் ரத்தம் என்ற உயிர் திரவத்தை இன்னும் செயற்கையாக உருவாக்க இயலவில்லை. ஒவ்வொருவரின் உடலிலும் உள்ள சுமார் 5 லிட்டர் ரத்தத்தில், ரத்த தானத்தின் போது 350 மி.லி. ரத்தம் மட்டுமே எடுக்கப்படுகிறது. ரத்த தானம் செய்ய 20 நிமிடங்களே ஆகும். ரத்த தானம் செய்தவுடன் வழக்கம்போல அன்றாட வேலைகளை மேற்கொள்ளலாம். 18 வயது முதல் 65 வயது வரை உள்ள ஆரோக்கியமான அனைவரும் 3 மாதத்திற்கு ஒருமுறை ரத்த தானம் செய்யலாம். உரிய கால இடைவெளியில் ரத்த தானம் செய்வதால் உடலில் புதிய செல்கள் உருவாகி அவர்களின் உடல் நலன் காக்கப்படுகிறது. அரசு ரத்த மையங்கள் மற்றும் ரத்த தான முகாம்களில் தன்னார்வமாக ரத்த தானம் செய்யலாம்.

ரத்த மையங்களின் செயல்பாடுகளை கண்காணிப்பதற்கான e-RaktKosh வலைதளத்தில், ரத்ததான முகாம் மற்றும் ரத்த கொடையாளர்களை பதிவு செய்துகொள்ளலாம். பொதுமக்கள் இத்தளத்தை பயன்படுத்தி தங்களுக்கு தேவைப்படும் நேரங்களில் எளிதில் ரத்தம் பெற்றுக்கொள்ளலாம்.

தானமாக பெறப்படும் ஒரு அலகு ரத்தம் 4 உயிர்களை காப்பாற்றும். இவ்வாறு பிறர் உயிர் காக்க உதவிடும் ரத்தக் கொடையாளர்கள் மற்றும் ரத்த தான முகாம் அமைப்பாளர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களும், பதக்கங்களும் வழங்கி தமிழ்நாடு அரசு சிறப்பித்து வருகிறது. கடந்த ஆண்டு அரசு ரத்த மையங்கள் மூலம் 95 விழுக்காடு ரத்தம் சேகரிக்கப்பட்டு, தன்னார்வ ரத்த தானத்தில், இந்தியாவிலேயே தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ்வது குறித்து பெருமையடைகிறேன்.

நடப்பு ஆண்டில், தன்னார்வ ரத்ததானத்தில் தமிழ்நாடு 100 விழுக்காடு இலக்கை எய்தி, விலைமதிப்பற்ற உயிர்களை தொடர்ந்து காத்திட, பொதுமக்கள் அனைவரும் மனமுவந்து தன்னார்வ ரத்த தானம் செய்திட முன்வர வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். மகிழ்வுடன் ரத்த தானம் செய்திடுவோம்!
மனித உயிர்களை காத்திடுவோம்!! இவ்வாறு அவர் கூறியுள்ளார்.