முதல்வர் வேட்பாளர் என்று சொல்லும் அளவுக்கு அண்ணாமலை குழந்தை இல்லை: சீமான்!

அண்ணாமலை முதல்வர் வேட்பாளராக ஆசைப்பட்டார் என்று சொல்வது புதுக்கருத்தாக உள்ளது என்றும், நான் முதல்வர் வேட்பாளர் என்று சொல்லும் அளவுக்கு அண்ணாமலை குழந்தையும் இல்லை என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போவது அவர் கூறியதாவது:-

நான் முதல்வர் வேட்பாளர் என்று சொல்லும் அளவுக்கு அண்ணாமலை குழந்தையும் இல்லை பயித்தியக்காரனும் இல்லை. நம்ம கேள்வி பட்டது வரைக்கும்.. 2,3 விஷயம் சொல்கிறார்கள். அண்ணா பற்றி குறை சொன்னது.. 20 இடம் கேட்டதாக சொல்கிறார்.. அதற்கு இவர்களுக்கு (அதிமுக) உடன்பாடு இல்லை. பிறகு சசிகலா, தினகரன், ஓபிஎஸ் இவர்களை எல்லாம் இணைத்து வலிமையாக்குங்கள் என்று பாஜக கருத்து சொன்னதாகவும் அதற்கு அதிமுக உடன்படவில்லை என்றும் விவாதங்களை பார்க்க முடிகிறது. அதில் அண்ணாமலை முதல்வர் வேட்பாளராக ஆசைப்பட்டார் என்று சொல்வது புதுக்கருத்தாக உள்ளது. அது நம்பும்படியாக இல்லை. வரும் நாடாளுமன்ற தேர்தலில் பெரிய கூட்டணி நான் தான்..நான் மக்களோடு சேர்ந்து கூட்டணி வைக்க போகிறேன். நான் முழுமையாக மக்களை நேசிக்கிறேன்.. நம்புகிறேன். இது இரண்டும் தான் ஒரு தலைவனுக்கான அடிப்படை தகுதி என நம்புகிறேன். அந்த நம்பிக்கையின் அடிப்படையில் நான் வேலை செய்கிறேன். அதனால் நான் தனித்து தான் நிற்பேன். என் மக்களை நேசிக்காதவன் நம்பாதவனுக்கு தான் படை தேவை. நான் என்னுடைய வீரத்தை என்னுடைய பலத்தை நம்பிதான் போர்க்களத்திற்கு போகிறேனே தவிர.. என்னோடு இவர் வருகிறார்.. இவர் 10 பேர் அடிப்பாரா.. இவர் 5 பேரை அடிப்பரா.. இதெல்லாம் கழுதைப்புலி, செந்நாய்க்கு சரி.. புலிக்கு சரியில்லை. வேட்டைக்கு போகும் போது எல்லாரையும் கூட்டிட்டு வரும்.. ஆனால், புலி ஒற்றை ஆளாகத்தான் வரும்.

என்னையை நேசிக்கிற ஒரு கூட்டம் வருதா.. திராவிட கட்சிகளோடு இந்திய கட்சிகளோடு உடன்பாடு இல்லை.. அண்ணன் சொல்வது சரியாகத்தான் இருக்கு.. அவருடன் போகலாம் என்று வந்தால் யோசிக்கலாம். இந்த தேர்தலிலும் தனித்து தான் போட்டி.. 2026லும் தனித்துதான் போட்டி.. காவிரி விவகாரம் தொடர்பாக சென்னையில் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும். ஜனநாயாக முறையில் போராட்டம் இருக்கும். அவர்களை போல அடித்து பேருந்தை மறித்து சண்டை போடுவது இருக்காது. கடந்த முறை கர்நாடாகவில் இருந்து வந்த பேருந்தை என் தம்பி கடல் தீபன் நிறுத்தி விட்டார். அதற்கு 90 நாள் குண்டாசில் போட்டார்கள். ஆனால், அவர்கள் அவ்வளவு அடிக்கிறார்கள்.. ஆனால், ஒரு எப்.ஐ.ஆர் கூட கிடையாது.

காவிரி விவகாரத்தில் கர்நாடகாவில் அனைவரும் ஒன்றாக எதிர்க்கின்றனர். இந்த விவகாரம் குறித்து அரசியல் தலைவர்கள் பேசி ஒரு தீர்வு காண வேண்டும். ஒரு கலைஞனிடம் கேட்பது என்ன நியாயம். இது மாதிரி கன்னட நடிகர் யாஷ் நடித்த கே.ஜி.எஃப் படத்தின் இரண்டு பகுதி வெளிவந்தது. அதற்கு தமிழகத்தில் நாம் எந்த இடையூறும் செய்யவில்லை. வரவேற்பு தான் வழங்கினோம். நடிகர் சித்தார்த் ஒரு கலைஞன் அவருக்கும் தண்ணி பிரச்சினைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவர் காவிரி தண்ணி கொடுங்க என்று கேட்கவும் இல்லை.

அது அரசியல் தலைவர்கள் பேச தீர்வு காண வேண்டும். ஆனால் ஒரு நடிகரிடம் எப்படி இது போல் கேள்வி கேட்க முடியும். அந்த அரங்கத்துக்குள் காவலர்கள் இருந்தும் கேள்வி கேட்டவர்களை ஏன் தடுக்கவில்லை. இது தமிழ்நாடு மாநிலத்தில அப்படி செய்தால் அவர்கள் கைது செய்து பிரச்சனை வராமல் பார்த்துக் கொள்வார்கள். அந்த அடிப்படை பண்பு கூட அந்த மாநிலத்தில் ஏன் இல்லை, இதெல்லாம் கடுமையாக கண்டிக்கத்தக்கது. இவ்வாறு சீமான் தெரிவித்துள்ளார்.