பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து ஆளுநர் ரவியிடம் பிரேமலதா விஜயகாந்த் நேரில் மனு!

காவிரி நீர் விவகாரம் முதல் ஆசிரியர்கள் போராட்டம் வரையில் பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து, ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் தேமுதிக சார்பில் அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் மனு அளித்தார்.

தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று சனிக்கிழமை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தார். அவர் அளித்த கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது:-

பிலிகுண்டுலுவில்‌ 15 நாட்களுக்கு 5,000 கனஅடி தண்ணீர்‌ திறந்துவிட வேண்டும்‌ என்ற காவிரி நீர்‌ மேலாண்மை ஆணையத்தின்‌ உத்தரவை அமல்படுத்துமாறு கர்நாடக அரசுக்கு அழுத்தம்‌ தருமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு ஆலோசனை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்‌. விளையும்‌ பயிர்கள்‌ மற்றும்‌ அதையே நம்பி வாழ்வாதாரம்‌ கொண்ட விவசாயிகளின்‌ கோரிக்கைகள்‌ மற்றும்‌ இந்தப்‌ பிரச்சினைக்கான ஒரே நீண்டகாலத்‌ தீர்வு, அதாவது, அனைத்து நதிகளையும்‌ இணைத்து சீரான மற்றும்‌ சமமான நீர்ப்‌ பங்கீட்டை செயல்படுத்துவதற்கு வலியுறுத்த வேண்டும்‌.

இரண்டாவதாக, 25 இடங்களில்‌ அமலாக்க இயக்குநரகம்‌ சமீபத்தில்‌ நடத்திய சோதனைகளுக்குப்‌ பிறகு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு மத்திய மற்றும்‌ மாநில அரசுகளை வலியுறுத்த கேட்டுக்கொள்கிறோம்‌. ஆற்றுப் படுகைகளில்‌ இருந்து பெருமளவிலான மணல்‌ வெட்டி எடுக்கப்பட்டு, தமிழகத்தால் நிர்வகிக்கப்படும்‌ நியமிக்கப்பட்ட மணல்‌ கிடங்குகள்‌ அல்லது விற்பனை நிலையங்களில்‌ விற்கப்படுகிறது. நீர்வளத்துறை, ஆற்று மணல்‌ மற்றும்‌ கிராவல்‌ குவாரிகளின்‌ சட்டவிரோத அகழ்வின்‌ அளவு அதிகரிப்பது மட்டுமல்லாமல்‌, மிகப்பெரிய ஜிஎஸ்டி ஏய்ப்பு மற்றும்‌ மாநிலத்திற்கு வருவாய்‌ இழப்பை ஏற்படுத்துகிறது.

மூன்றாவதாக, தமிழ்நாடு ஸ்டேட்‌ மார்கெட்டிங்‌ கார்ப்பரேஷனில்‌ (டாஸ்மாக்‌) நிலவும்‌ முறைகேடுகளால்‌ பொதுமக்களுக்கு உடல்ரீதியாகவும்‌, பொருளாதார ரீதியாகவும்‌ பாதிப்பு ஏற்படுகிறது. அதிகரித்து வரும்‌ விநியோகத்தை முறைபடுத்த, மாநில அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்‌. மேலும்‌, கல்வி நிறுவனங்கள்‌, பணியிடங்கள்‌ மற்றும்‌ பொழுதுபோக்கு வளாகங்களில்‌ இளைஞர்கள்‌ போதைப்‌ பொருட்களை பயன்படுத்துவதை, ஆளுங்கட்சியான திமுக அலட்சியம்‌ காட்டாமல்‌ உடனடியாக கவனிக்க வேண்டும்‌.

நான்காவதாக, நெய்வேலி லிக்னைட்‌ கார்ப்பரேஷனில்‌ பணிபுரியும்‌ 10,000-க்கும்‌ மேற்பட்ட தொழிலாளர்களின்‌ கோரிக்கைகளை முறைப்படுத்தல்‌, சம வேலைக்கு சம ஊதியம்‌ மற்றும்‌ நியாயமான ஊதியம்‌ போன்ற கோரிக்கைகளை நிறைவேற்ற, மத்திய மற்றும்‌ மாநில அரசுகளை வலியுறுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்‌. ஏறக்குறைய 25 ஆண்டுகளாக 116 நிறுவனத்தின்‌ கீழ்‌ பணியாற்றிய தொழிலாளர்களின்‌ துன்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து, நாட்டில்‌ உள்ள தொழிலாளர்‌ சட்டங்களின்‌ உணர்வை நிலைநிறுத்த வேண்டும்‌.

ஐந்தாவதாக, அனைத்துத்‌ தரப்பினரும்‌ ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தையில்‌ ஈடுபடும்‌ வகையில்‌, இலங்கை ராணுவம்‌ மற்றும்‌ கடலோரக்‌ காவல்படையினரால்‌ தமிழக மீனவர்கள்‌ சட்டவிரோதமாக கைது செய்யப்படுவதைத்‌ தடுக்க மத்திய மற்றும்‌ மாநில அரசுகள்‌ தலையிட்டு, தேவையான நடவடிக்கை எடுக்குமாறு உங்களை வலியுறுத்துகிறோம்‌. இலங்கையுடன்‌, மீனவர்களின்‌ வாழ்வாதாரத்தைப்‌ பாதுகாப்பதோடு, இந்தப்‌ பிரச்சினையைத்‌ தீர்ப்பதற்கான ஒரே நீண்ட கால தீர்வாக, அதாவது 1974ஆம்‌ ஆண்டு கச்சத்தீவு இலங்கைக்கு தாரைவார்த்த இந்திய – இலங்கை கடல்சார்‌ ஒப்பந்தத்தை ரத்து செய்ய வலியுறுத்த வேண்டும்‌. வரலாற்று ரீதியாக இந்திய மீனவர்களின்‌ மீன்பிடி மையமாக இருந்த கச்சத்தீவு அருகே இந்திய மீனவர்கள்‌ மீன்பிடிக்க தடை விதித்த 1976-ஆம்‌ ஆண்டு இருநாடுகளுக்கும்‌ இடையேயான ஒப்பந்தம்‌ ரத்து செய்யப்பட்ட வேண்டும்‌.

தமிழகத்தைச்‌ சேர்ந்த 6000-க்கும்‌ மேற்பட்ட இடைநிலை‌ மற்றும்‌ முதுநிலை ஆசிரியர்களின்‌ சமவேலைக்கு சம ஊதியம்‌ வழங்க வேண்டும்‌ என்ற கோரிக்கையை முன்வைத்து, காலவரையற்ற உண்ணாவிரதப்‌ போராட்டத்தை முடிவுக்குக்‌ கொண்டு வர, தமிழக அரசு தலையிட்டு தேவையான நடவடிக்கை எடுக்குமாறு மாநில அரசுக்கு அறிவுறுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்‌. பொதுக்கல்வி இயக்குநரகம்‌, தேசத்தின்‌ சிறந்த எதிர்காலத்தை நோக்கி மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கும்‌ அவர்களின்‌ உன்னத பணியை மீண்டும்‌ துவங்க ஆணையிட வலியுறுத்த வேண்டும்‌. அனைத்து மக்கள்‌ பிரச்சினைகளைத்‌ தீர்ப்பதற்குத்‌ தேவையான நடவடிக்கையை எடுக்குமாறு மத்திய மற்றும்‌ மாநில அரசுகளை வலியுறுத்த உங்கள்‌ அரசியலமைப்பு அதிகாரங்கள்‌ பெரிதும்‌ உதவும்‌ என்று நாங்கள்‌ நம்புகிறோம்‌. இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.