கனமழை காரணமாக வெள்ளக்காடாக மாறிய நியூயார்க்!

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கடந்த சில நாள்களாக பெய்துவரும் கனமழை காரணமாக அந்நகரம் முழுவதும் வெள்ளக் காடாக மாறியுள்ளது.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் வெள்ளிக்கிழமை (நேற்று) காலை பெய்த கனமழையினால் நியூயார்க் நகரின் தெருக்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. மேலும், சுரங்கப்பாதைகளும் மூடப்பட்டுள்ளன. இந்த திடீர் வெள்ளம் காரணமாக சாலைப் போக்குவரத்து மற்றும் விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. அடுக்குமாடி குடியிருப்புகளில் அடித்தளத்தில் வசிப்பவர்கள் பாதுகாப்பான மேல் தளத்திற்கு செல்லுமாறு அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். தெருக்கள் மற்றும் சுரங்கப்பாதைகள் அடைக்கப்பட்டுள்ளதால் மக்கள் யாரும் வெளியே செல்ல வேண்டாம். ஆபத்தான சூழலில் இருந்து இன்னும் நாம் மீளவில்லை என்று நியூயார்க் நகர மேயர் எரிக் ஆடம்ஸ் கேட்டுக்கொண்டார்.

ஜான் எஃப். கென்னடி விமான நிலையத்தில் வெள்ளிக்கிழமை இரவு 22 செ.மீ மழை பெய்துள்ளது. வழக்கமாக செப்டம்பர் மாதம் பெய்யும் மழையின் அளவையும், 1960 ஆம் ஆண்டு டோனோ புயலின் போது பெய்த மழையின் அளவையும் நேற்று பெய்த மழை முறியடித்துள்ளது.

நியூயார்க் நகரப்பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தால் அந்நகர ஆளுநர் கேத்தி ஹோச்சுல் அவசர நிலையை அறிவித்துள்ளார். அதேபோல், நியூயார்க் நகர மேயரரும் தனி அவசர நிலையை அறிவித்துள்ளார்.

நியூயார்க் நகரம் முழுவதுக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.