பெரியார் சிலை சேதம்: அர்ஜூன் சம்பத் மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்!

ஸ்ரீரங்கம் பெரியார் சிலையை சேதப்படுத்திய விவகாரத்தில் தன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

திருச்சி ஸ்ரீரங்கம் கோவில் முன்பாக பெரியார் சிலை அமைந்துள்ளது. இந்தச் சிலையை அகற்ற வேண்டும் என இந்து அமைப்புகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றன. கடந்த 2006ஆம் ஆண்டு ஸ்ரீரங்கம் கோவிலுக்கு முன்பாக உள்ள பெரியார் சிலையை உடைத்து சேதப்படுத்தியது தொடர்பாக இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் உள்ளிட்ட பலர் மீது ஸ்ரீரங்கம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு திருச்சி தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கில் தொடர்புடைய ஒருவர் இறந்துவிட்டார்.

இந்த வழக்கு பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் நிலையில், என் மீதான எந்த ஆதாரமும் இல்லாமல் அனுமானத்தின் அடிப்படையில் முடிவு செய்யப்பட்டு, வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்குப்பதிவு செய்யப்பட்டு அலைக்கழிக்கும் வகையில் விசாரணை தாமதமாக நடைபெற்று வருகிறது. எனவே என் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்து, கீழமை நீதிமன்ற விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் நீதிபதி இளங்கோவன் முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தன் மீதான வழக்கு விசாரணையை ரத்து செய்ய வேண்டும் என அர்ஜூன் சம்பத் கோரிக்கை விடுத்தார். அதேசமயம், அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் அன்புநிதி, பெரியார் சிலையை சேதப்படுத்தியது குறித்து மனுதாரர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது போன்ற செயல்களால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுகிறது என்றார். மேலும், இந்த வழக்கு திருச்சி விசாரணை நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று ஏழு சாட்சிகளிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

இதனை பதிவு செய்துகொண்ட நீதிபதி, அர்ஜூன் சம்பத்திற்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய உத்தரவிட முடியாது எனக் கூறி அர்ஜுன் சம்பத் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தார்.