தமிழ்நாடு அரசு பணிகள் அனைத்தும் தமிழர்களுக்கு மட்டுமே வழங்க வேண்டும்: வேல்முருகன்!

நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பே தமிழக முதல்வர் இதனை அறிவிக்கவில்லை என்றால் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி பெரும் பின்னடைவை சந்திக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளார் தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன்.

தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டம் சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ கலந்து கொண்டார். இந்தப் பொதுக்குழு கூட்டத்தில் தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும், தமிழ்நாடு அரசு பணிகள் அனைத்தும் தமிழர்களுக்கு மட்டுமே வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த வேல்முருகன் கூறியதாவது:-

இன்று நடைபெற்ற தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டத்தில் உட்கட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஜனவரி, பிப்ரவரி, மார்ச் ஆகிய மூன்று மாத காலங்களில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் அனைத்து நிலை பதவிகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. கட்சிக்கான புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட உள்ளனர். தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி, பிப்ரவரி 28ஆம் தேதி கடலூரில் கோரிக்கை மாநாடு நடத்த இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நாடாளுமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் தமிழக வாழ்வுரிமை கட்சி போட்டியிட விரும்பும் தொகுதிகளை முதல்வர் பரிசீலிக்க வேண்டும்.

நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பே தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என தமிழக முதல்வர் அறிவிக்கவில்லை என்றால் தேர்தலில் திமுக தலைமையிலான வெற்றி கூட்டணி பெரும் பின்னடைவை சந்திக்கும். சமூகநீதி பேசும் தமிழக முதல்வர் ஸ்டாலின் தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பை நடத்தி சமூக நீதியை நிலைநாட்ட வேண்டும். திமுக தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் அவர்கள் எங்களுக்கு கோரிக்கைகளுக்கு மதிப்பளித்து கோரிக்கைகளை நிறைவேற்றி தர வேண்டும். இல்லையென்றால் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் சிறப்பு பொதுக்குழு கூட்டப்பட்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கான முடிவுகளை அறிவிப்போம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.