சட்டப் பேரவையின் அனுமதியின்றி இஸ்ரேலுக்கு ஆயுத விற்பனை மேற்கொள்ள அமெரிக்கா அனுமதி!

அமெரிக்கா, அந்நாட்டின் சட்டப் பேரவையின் அனுமதியின்றி இஸ்ரேலுக்கு ஆயுத விற்பனை மேற்கொள்ள இந்த மாதத்தில் இரண்டாவது முறையாக அவசரகால முன்னெடுப்பைக் கையில் எடுத்துள்ளது.

பொதுமக்கள் பலியாகிற விவகாரத்தில் பன்னாட்டளவில் கடும் விமர்சனங்களை இஸ்ரேல் சந்தித்துவரும் நிலையில், அமெரிக்கா இந்த விற்பனையை மேற்கொள்ளவுள்ளது. அமெரிக்க வெளியுறவு செயலர் ஆண்டனி பிளிங்கன், அவசரகால அடிப்படையில் 147.5 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள போர் கருவிகளையும் தளவாடங்களையும் இஸ்ரேலுக்கு விற்பனை செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து அமைச்சகம், “இஸ்ரேலின் தற்காப்புக்கான அவசிய தேவையை முன்னிட்டு, செயலர் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி உடனடி அனுமதி அளித்துள்ளார். சட்டப் பேரவைக்கு இது குறித்து தெரியப்படுத்தியுள்ளோம்” எனத் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும், இஸ்ரேலின் பாதுகாப்பில் அமெரிக்கா கவனம் கொண்டிருப்பதாகவும் அந்நாடு எதிர்கொள்ளும் இடர்களிலிருந்து தற்காத்துக் கொள்ள உதவுவது அமெரிக்க தேச நலன்களில் ஒன்று எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜோ பைடன் நிர்வாகம், அவையின் அனுமதியில்லாமல் ஆயுத விற்பனைக்கான அவசரகால முடிவை எடுப்பது இந்த மாதத்தில் இது இரண்டாவது முறை. அதே நேரத்தில், “நாங்கள் இஸ்ரேல் அரசைப் பன்னாட்டு மனிதநேய விதிமுறைகளைப் பின்பற்ற மட்டுமல்லாமல் பொதுமக்கள் பலியாவதைத் தடுக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வலியுறுத்தியுள்ளோம்” என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவை உறுப்பினர்களின் அனுமதி பெறாமல் நடைபெறும் இந்தப் பரிமாற்றம் வழக்கமாக நடக்கக்கூடியதல்ல. முந்தைய ஆண்டுகளில் டிரம்ப் அதிபராக இருந்த போது ஏமனுக்கு எதிரான போரில் செளதி, ஜோர்டான் உள்ளிட்ட நாடுகளுக்கு அமெரிக்கா ஆயுதங்களை அனுப்பியது, சட்ட பேரவை உறுப்பினர்களிடையே கடும் அதிப்ருதியை ஏற்படுத்தியது.