உயர்த்தப்பட்ட பாசஞ்சர் ரயில்களின் கட்டணம் 4 ஆண்டுகள் கழித்து குறைக்கப்பட்டுள்ளது!

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் காலத்தில் உயர்த்தப்பட்ட பாசஞ்சர் ரயில்களின் கட்டணம் 4 ஆண்டுகள் கழித்து குறைக்கப்பட்டு இருக்கின்றன.

கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பாக உலகம் முழுவதும் கொரோனா முதல் அலை பரவி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்த சமயத்தில் மத்திய அரசு ரயில் கட்டணத்தை உயர்த்தியது. ஆதாவது பாசஞ்சர் ரயில்களை சிறப்பு விரைவு ரயில்கள் என்று பெயரை மாற்றிய மத்திய அரசு சிறப்பு விரைவு ரயில்களில் வசூலிக்கப்படும் கட்டணத்தை வசூலிக்கத் தொடங்கியது. இதன் காரணமாக பயணிகள் கூடுதல் கட்டணத்தை செலுத்தி பாசஞ்சர் ரயில்களில் பயணித்து வந்தனர். கொரோனா தொற்றுக்காலத்தில் பயணிகள் ரயில்களின் சாதாரண கட்டணங்கள் சிறப்பு கட்டணமாக உயர்த்தப்பட்ட நிலையில், கொரோனா தொற்று முடிந்து இயல்பு நிலைக்கு திரும்பினாலும் பயணிகள் ரயில்களின் கட்டணத்தை ரயில்வே நிர்வாகம் குறைக்கவே இல்லை. இது தொடர்பாக பொதுமக்கள், ரயில் பயணிகள், வர்த்தகர்கள், தன்னார்வ அமைப்புகள் தொழிற்சங்கங்கள் கொரோனா காலத்தில் உயர்த்தப்பட்ட சாதாரண ரயில் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தார்கள். ஆனால், மத்திய அரசும் ரயில்வேயும் பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்காமல் சிறப்பு விரைவு ரயில்களில் வசூலிக்கப்படும் கூடுதல் கட்டணத்தையே பாசஞ்சர் ரயில்களிலும் வசூலித்து வந்தது. இதன் காரணமாக அன்றாடம் பாசஞ்சர் ரயில்களை பயன்படுத்தி வந்த பொதுமக்கள், வியாபாரிகள் கடுமையான பாதிப்புகளை சந்தித்தனர்.

இந்த நிலையில் தற்போது ரயில்வே நிர்வாகம் நேற்று பாசஞ்சர் ரயில்களில் பழைய கட்டணத்தை வசூலிக்க இருப்பதாக அறிவித்து யுடிஎஸ் செயலியிலும் அதை நடைமுறைப்படுத்தி உள்ளது. இதன் மூலம் சாதாரண பயணிகள் ரயில்களின் கட்டணம் முன்பு இருந்த நிலைக்கு குறைந்து உள்ளது. ரயில் நிலையங்களிலிம் மீண்டும் பழைய கட்டணத்தில் பயணச் சீட்டுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதனால் பொதுமக்கள், ரயில் பயணிகள், வர்த்தகர்கள், தினசரி ரயிலில் செல்லும் அலுவலர்கள் மாணவ மாணவிகள் வர்த்தகர்கள் தொழிலாளிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பழைய பாசஞ்சர் ரயில் கட்டண விகிதத்தையே மக்கள் மறந்துபோய் இருந்த நிலையில், அது மீண்டும் அமலுக்கு வந்து இருப்பதை பார்த்து பேருந்துகளை விட குறைவான கட்டணமாக உள்ளதாக தெரிவித்து வருகிறார்கள்.