4 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டு இறுதித் தேர்வு தேதிகளில் மாற்றம்!

4 முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இந்த தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.ஏப்ரல் 10ஆம் தேதி அறிவிக்கப்பட்டிருந்த அறிவியல் தேர்வு ஏப்ரல் 22ஆம் தேதியும், 12ஆம் தேதி அறிவிக்கப்பட்ட சமூக அறிவியல் தேர்வு ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மார்ச் 1 ஆம் தேதி 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது. இந்த தேர்வு 22ஆம் தேதி வரை நடைபெற்றது. முதல் நாளில் வழக்கம் போல் தமிழ் பாடத் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 7 ஆயிரத்து 534 பள்ளிகளில் பயின்ற 3 லட்சத்து 58 ஆயிரத்து 201 மாணவர்கள் மற்றும் 4 லட்சத்து 13ஆயிரத்து 998 மாணவிகள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் எழுதினர். மொத்தம் 7 லட்சத்து 72 ஆயிரத்து 200 பேர் எழுதினர். இது தவிர தனித்தேர்வர்கள் 21 ஆயிரத்து 875 பேரும் சிறைவாசிகள் 125 பேரும் எழுதினர்.

அதேபோல கடந்த மார்ச் 4 ஆம் தேதி பிளஸ் 1 மாணவர்களுக்கான தேர்வு தொடங்கி 25 தேதியுடன் தேர்வு நிறைவடைந்தது. மேலும் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த் 26 ந்தேதி தொடங்கியது. பொதுத்தேர்வு வரும் ஏப்ரல் 8ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. அதேபோல 1 முதல் 9ஆம் வகுப்புகளுக்கு முழு ஆண்டு தேர்வு ஏப்ரல் 18 முதல் 30-ம் தேதி வரை நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையே லோக்சபா தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. எனவே தேர்தலுக்கு முன்பாக தேர்வுகளை நடத்தி முடிக்க தமிழக அரசு முடிவு செய்தது. அதன்படி, புதிய தேர்வுக் கால அட்டவணையை பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டது. அதில் 1 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 2 முதல் 12ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெறும். ஏப்ரல் 13-ம் தேதி முதல் கோடை விடுமுறை விடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், தற்போது 4 முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இந்த தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஏப்ரல் 10ஆம் தேதி அறிவிக்கப்பட்டிருந்த அறிவியல் தேர்வு ஏப்ரல் 22ஆம் தேதியும், 12ஆம் தேதி அறிவிக்கப்பட்ட சமூக அறிவியல் தேர்வு ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ரமலாண் பண்டிகைக்கான பிறை தெரிவதற்கான வாய்ப்புள்ளதால், அந்த தேதிகளில் மாற்றம் செய்து அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை வெளியிட்ட சுற்றறிக்கையில்,”பார்வை (1)ல் காணும் செயல்முறைகளில் 2023-24ஆம் கல்வி ஆண்டு 1 முதல் 9ஆம் வகுப்புகளுக்கான பள்ளி இறுதி தேர்வுகள் நடத்துதல் குறித்து அறிவுரைகள் வழங்கப்பட்டன. ஈகை பெருநாளை முன்னிட்டு பள்ளித் தேர்வுகளில் தேதியை மாற்றி அமைக்க கோரி பார்வை (2) மற்றும் (3)ல் கண்டுள்ளபடி மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர்கள், பெற்றோர்கள் மற்றும் பொது மக்களிடமிருந்து அரசுக்கு கோரிக்கைகள் வரப்பெற்றுள்ளன.

அதனடிப்படையில், தேர்வு கால அட்டவணையில் பின்வருமாறு மாற்றம் செய்து அறிவுரைகள் வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு / அரசு உதவிபெறும் / தனியார் பள்ளிகளில் 4 முதல் 9ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பார்வை (1)யில் காணும் செயல்முறைகளில் 10.04.2024 அன்று நடைபெறுவதாக குறிப்பிடப்பட்ட அறிவியல் தேர்வு 22.04.2024ஆம் தேதிக்கும் 12.04.2024 அன்று நடைபெறுவதாக குறிப்பிடப்பட்ட சமூக அறிவியல் தேர்வு 23.04.2024ஆம் தேதிக்கும் மாற்றம் செய்யப்படுகிறது. அதன்படி, தேர்வுகளை நடத்திட அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் உரிய அறிவுரைகள் வழங்கிட அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.