அதிமுக எங்கள் பக்கம்தான் வந்து சேரும்: ஓ பன்னீர் செல்வம்!

தேனியில் வாக்களித்த முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம், ‘அதிமுக எங்கள் பக்கம்தான் வந்து சேரும். அதிமுக வேட்பாளர்கள் பற்றி அண்ணாமலை சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை. கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும்’ என்று கூறினார்.

தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து ராமநாதபுரம் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடுகிறார் முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம். பலாப்பழம் சின்னத்தில் போட்டியிடும் ஓ பன்னீர் செல்வம், அதிமுக உரிமை மீட்புக்குழுவை தொடங்கியுள்ளார். இந்த நிலையில், இன்று தனது சொந்த ஊரான தேனி பெரிய குளத்தில் முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம் வாக்களித்தார். தொடர்ந்து ஓ பன்னீர் செல்வம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர்கூறியதாவது:-

ராமநாதபுரத்தில் எனக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. உறுதியாக நான் வெற்றி பெறுவேன். தற்போது ராமநாதபுரம் செல்கிறேன். இந்தியா முழுவதும் மோடி மீண்டும் பிரதமர் ஆக வேண்டும் என்ற அலை உள்ளது. மக்கள் நல்ல ஆதரவை தருகிறார்கள். நாடாளுமன்ற தேர்தலில் நான் போட்டியிட முடிவு செய்தது அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு எடுத்த முடிவு. அதன்படி நான் போட்டியிடுகிறேன். அதிமுக உறுதியாக எங்கள் பக்கம்தான் வந்து சேரும். எடப்பாடி பழனிசாமி இந்த தேர்தலில் எங்கே இருக்கிறார் என்றே தெரியவில்லை. 2026-ல் மீண்டும் அம்மாவின் ஆட்சியை அமைப்போம்.

தொண்டர்கள் இல்லாமல் வெறும் காண்ட்ராக்டர்களுக்கு தான் தேர்தலில் போட்டியிட எடப்பாடி வாய்ப்பு கொடுத்துள்ளதாக அண்ணாமலை கூறியதாக கேட்கிறீர்கள். அண்ணாமலை சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை. கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும். உறுதியாக தேசிய ஜனநாயக கூட்டணி இந்தியா முழுமைக்கும் ஆட்சி அமைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.