நியாயமான முறையில் தமிழகத்தில் தேர்தல் நடைபெற வாய்ப்பில்லை: அன்புமணி!

வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதாக புகார்கள் வருகிறது.. ஆனால் இதுவரைக்கும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்ததாக தெரிவிக்கவில்லை என்றும், நியாயமான முறையில் தமிழகத்தில் தேர்தல் நடைபெற வாய்ப்பில்லை என பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் புகார் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் பொதுமக்கள் ஆர்வத்துடன் தங்கள் வாக்கினை பதிவு செய்து வருகின்றனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பிரபல தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் நடிகர்கள் நடிகைகள் உள்ளிட்ட பலரும் காலையிலிருந்து வாக்குச்சாவடியில் காத்திருந்து தங்கள் வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில் திண்டிவனம் மரகதாம்பிகை அரசு பள்ளி வாக்கு சாவடி மையத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், தனது மகள்கள் சம்யுக்தா, சஞ்சித்ரா, சங்கமித்ரா ஆகியோருடன் இணைந்து வாக்கினை செலுத்தி ஜனநாயக கடமை ஆற்றினார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி, “தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பாமக கூட்டணிக்கு சாதகமான அமைதி புரட்சி நடைபெற்று கொண்டிருக்கிறது. தமிழகம் புதுச்சேரியில் 40 தொகுதிகளில் பாமக கூட்டணி வெற்றி பெறும். மக்கள் மனதில் மாற்றம் வரவேண்டுமென ஏக்கம் இருப்பதால் நிச்சயமாக தங்கள் கூட்டணி வெற்றி பெற்று மூன்றாவது முறையாக மிகப்பெரிய வெற்றி பெற்று பிரதமராக மோடி தொடர்வார். சித்திரை மாதம் மாம்பழ சீசன். தேர்தல் நியாயமாகவும் அமைதியாகவும் நடைபெறுகிறது. வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா கொடுப்பதாக புகார்கள் வருகிறது. ஆனால் இதுவரைக்கும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்ததாக தெரியவில்லை. அரக்கோணம் பகுதியில் பணம் பிடிக்கப்பட்டுள்ளது. ஆனால் நடவடிக்கை இல்லை.

ஆளும் கட்சியினர் அதிகாரிகளை வைத்து கொண்டு பண பட்டுவாடா செய்துள்ளதாகவும், 99 சதவிகித அதிகாரிகள் தமிழ்நாட்டினை சார்ந்தவர்களாக இருப்பதால் அரசு மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் தயங்குவதாகவும், இதற்கு தேர்தல் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறோம். தேர்தல் சட்டங்களில் மாற்றம் கொண்டு வர வேண்டும். வேட்பாளர் பணம் கொடுத்து வாக்கு பெற்றால் தகுதி நீக்கம் செய்ய வேண்டுமென்ற சட்டம் கொண்டு வர வேண்டுமென தேர்தல் விதிகளை தீவிரமாக்க வேண்டும்

தமிழகத்தில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் உள்ளது. உத்திரபிரதேசம், மஹாராஷ்டிரா போன்ற இடங்களில் இது போன்ற கலாச்சாரம் இல்லை. நியாயமான முறையில் தமிழகத்தில் தேர்தல் நடைபெற வாய்ப்பில்லை. பணம் வைத்துள்ளவர்களுக்கு சாதகமாக கடந்த தேர்தலில் வாக்களித்துள்ளார்கள். ஆனால் இந்த தேர்தலில் பாமகவிற்கு மக்கள் வாக்களிக்க அமைதி புரட்சி நடைபெற்று கொண்டிருக்கிறது. 57 ஆண்டுகள் மக்கள் இரு கட்சிகளுக்கு வாக்களித்தது போதுமென முடிவு செய்துவிட்டதால் இந்த தேர்தலில் பிரதிபலிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.