அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன்ஜாமீன்!

அரசு அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்த வழக்கில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சருக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

கரூரில் நடைபெற்ற குடிமராமத்து பணிகளை தடுத்து, அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்ததாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் மீது கரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் விஜயபாஸ்கர் மனுத் தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, கடந்த 2022-ம் ஆண்டு முதல் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது நிலுவையில் உள்ள வழக்குகள் எத்தனை? அந்த வழக்குகளின் தற்போதைய நிலை என்ன? என்பது குறித்தும் போலீசார் பதிலளிக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன் முன்பாக மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அவர் மீது 23-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், அதில் சில வழக்குகள் ரத்து செய்யப்பட்டு விட்டதாகவும், சில வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, விஜயபாஸ்கருக்கு நிபந்தனை அடிப்படையில் முன்ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.