நெதன்யாகு ராஜினாமா.. இஸ்ரேலில் அவசர நிலை பிரகடனம்?

பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் தொடுத்து வரும் போர் உக்கிரமடைந்துள்ள நிலையில், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ராஜினாமா செய்துவிட்டதாகவும், இஸ்ரேலில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல் சமீபத்தில் உச்சத்தைத் தொட்டிருக்கிறது. சில நாட்களுக்கு முன்னர் ஐ நா பணியாளர்களை ஏற்றிச் சென்ற வாகனம் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதலை நடத்தியது. இதில் 7 பேர் கொல்லப்பட்டனர். எனவே உடனடியாக போர் நிறுத்தத்தை கொண்டு வரவேண்டும் என்று உலக நாடுகள் தீவிரமாக வலியுறுத்த தொடங்கின. இது நாள் வரை இஸ்ரேலுக்கு ஆதரவாக நின்ற அமெரிக்கா கூட, உடனடியாக போரை நிறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டது. ஆனால், போர் தற்போது வரை நிற்கவில்லை. 34,400க்கும் அதிகமானவர்கள் இந்த போரில் உயிரிழந்துள்ளனர். இதில், பாதிக்கும் மேற்பட்டவர்கள் பெண்களும், குழந்தைகளும்தான். மட்டுமல்லாது போர் காரணமாக காசாவுக்குள் நிவாரண பொருட்கள் எதுவும் வரவில்லை. இதனால் உணவுக்கும், குடிநீருக்கும் பஞ்சம் ஏற்பட்டிருக்கிறது. நோயாளிகள், கர்ப்பிணிகள், முதியவர்கள் உணவு கிடைக்காமல் அடுத்தடுத்து உயிரிழந்தனர். தொற்று நோய் பாதிப்புகளும் தீவிரமடைந்துள்ளன.

இதற்கிடையில் போர் நிறுத்தம் கோரி ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் பாலஸ்தீன ஆதரவு நாடுகள் கொண்டு வரும் தீர்மானங்களை, அமெரிக்காவும், பிரிட்டனும் தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி ரத்து செய்து வருகிறது. எனவே இந்த போர் மத்திய கிழக்கு முழுவதும் பரவும் அபாயம் எழுந்திருக்கிறது. அமெரிக்க பல்கலைக்கழகங்களில் போருக்கு எதிரான போராட்டங்கள் சூடுபிடித்துள்ளன. பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதலுக்கு அமெரிக்கா துணை போக கூடாது என்று மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். அமெரிக்காவில் மட்டும் 50க்கும் அதிகமான பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் இந்த போராட்டத்தை நடத்தி வருகின்றனர். போராடும் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களை அந்நாட்டு காவால்துறை கைது செய்து வருகிறது. தற்போது வரை 900க்கும் அதிகமானோர் கைதாகியுள்ளனர். மாணவர் போராட்டம் லண்டன், பாரிஸ் என ஐரோப்பிய நாடுகளுக்கும் பரவ தொடங்கியுள்ளது.

சூழல் இப்படி இருக்கையில் ‘சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தால்’ (ICC) போர் குற்றத்திற்காக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு விரைவில் கைது செய்யப்படுவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் மட்டுமல்லாது அந்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சர் கல்லன்ட் மற்றும் ராணுவ தலைமை அதிகாரி ஹைம் ஹலிவி ஆகியோர் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தால் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று சொல்லப்படுகிறது. இதற்கான கைது வாரண்ட் ஓரிரு வாரத்தில் பிறப்பிக்கப்படும் என்றும் சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர்.

இந்நிலையில், நெதன்யாகு பிரதமர் பதவிலிருந்து ராஜினாமா செய்துள்ளதாகவும், இஸ்ரேலில் அவசரநிலை பிரகடனப்படுத்தப் பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை. இருப்பினும் இஸ்ரேல் மக்களில் பாதி பேர், நெதன்யாகு உடனடியாக பதவி விலக வேண்டும் என்று விரும்புவதாக சொல்லப்படுகிறது. அதாவது இஸ்ரேலின் ’12 டெலிவிஷன்’ எனும் சேனல் நடத்திய கருத்துக்கணிப்பில் இந்த விவரங்கள் தெரிய வந்திருக்கிறது. இந்த கருத்துக்கணிப்பில் பங்கேற்றிருந்தவர்களில் 58 சதவிகிதமானோர் நெதன்யாகு உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளனர். இந்த தகவல்கள் காரணாமாகவே, நெதன்யாகு ராஜினாமா செய்துவிட்டார் என்று காட்டுத்தீ போல பரவி வருகிறது.