குவாரி விபத்தில் பலியானோர் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் வழங்க வேண்டும்: முத்தரசன்

“விருதுநகர் குவாரி வெடிபொருள் வெடிப்பு விபத்தில் பலியான குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் வீதம் இழப்பீடு வழங்க வேண்டும். மேலும், காயமடைந்தோர் முற்றிலும் குணமடைந்து பணிக்கு திரும்பி மறுவாழ்வு பெறும் வரையிலான காலத்துக்கு இழப்பீடு வழங்கவும் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகில் உள்ள கீழ உப்பிலிகுண்டு பகுதியில் கல் குவாரி கிடங்கில் வைக்கப்பட்டிருந்த வெடிபொருள்கள் வெடித்ததில் மூன்று பேர் சம்பவ இடத்தில் மரணமடைந்துள்ளனர். எட்டு பேர் கடுமையான தாக்குதலுக்கு ஆளாகி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வெடி விபத்து நடந்த இடத்துக்கு அருகில் கடமங்குளம் பகுதியில் இருந்த 40-க்கும் மேற்பட்ட வீடுகளில் தெறிப்பும், பிளவும் ஏற்பட்டு வசிக்க முடியாத அளவுக்கு சேதமாகி உள்ளன. விருதுநகர் மாவட்டத்தில் தொடர்ந்து இது போன்ற விபத்துக்கள் ஏற்பட்டு வருவதற்கு தொழில்துறை பாதுகாப்பு பிரிவு பொறுப்பேற்க வேண்டும்.

வேதனையும், துயரமும் தரும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய சிலர் கைது செய்யப்பட்டிருப்பதும், உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தமிழக அரசு தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்று நிவாரணம் வழங்கப்படும் என்ற முதல்வர் அறிவிப்பும் ஆறுதல் அளிக்கிறது. எனினும் எதிர்காலத்தில் குவாரி, பட்டாசு உற்பத்தி போன்ற வெடிபொருள்கள் பயன்படுத்தும் பணியிடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதி செய்வதில் தமிழக அரசு சமரசம் செய்து கொள்ளக் கூடாது என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்திக் கேட்டுக் கொள்வதுடன், குவாரி வெடிபொருள் வெடிப்பு விபத்தில் பலியான குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் வீதம் இழப்பீடு வழங்க வேண்டும். மேலும், காயமடைந்தோர் முற்றிலும் குணமடைந்து பணிக்கு திரும்பி மறுவாழ்வு பெறும் வரையிலான காலத்துக்கு இழப்பீடு வழங்கவும், வீடுகளை இழந்து நிற்கும் கடமங்குளம் பகுதியில் பாதிக்கப்பட்டோர் வீடுகளை புதுப்பித்து கட்டித்தரவும் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில் ஈரோட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் இரா.முத்தரசன் நிருபர்களிடம் கூறியதாவது:-

தேர்தல் ஆணையத்தின் மீது மக்கள் வைத்துள்ள நம்பகத்தன்மை தொடர்ச்சியாக கேள்விக்குறியாகி கொண்டிருக்கிறது. இவையெல்லாம் ஜனநாயகத்திற்கு உகந்தது அல்ல. நரேந்திர மோடி தனது தேர்தல் பிரசார முறை, அவர் அணுகும் முறை எல்லாம் ஹிட்லரை முன்னுதாரணமாக கொண்டுள்ளது. ஹிட்லர் வழியை நரேந்திர மோடி பின்பற்றுகிறார்.

தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய தண்ணீரை வழங்கிட கர்நாடகா அரசிடம் கேட்கிறோம். இதில் காங்கிரஸ், பாஜ என யார்? ஆட்சியில் இருந்தாலும் ஒரு அடாவடி தனம் மேற்கொள்ளப்படுகிறது. இது நல்லதல்ல.
பேராசிரியை நிர்மலாதேவிக்கு தண்டனை வழங்கியதை வரவேற்கிறோம். ஆனால் அவர் யாருடைய சுகத்திற்காக மாணவிகளை தவறாக பயன்படுத்த முயற்சி எடுத்தார் என்ற கேள்விக்கு இதுவரை விடை வரவில்லை. அந்த பெரும்புள்ளி யார்? என உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு முத்தரசன் கூறினார்.