சூரி நாயகனாக நடிக்கும் புதிய படத்தின் பணிகள் பூஜையுடன் தொடக்கம்!

சூரி நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்தின் பணிகள் பூஜையுடன் தொடங்கியது.

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் ‘விடுதலை’ படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்த நடிகர் சூரி மீண்டும் கதையின் நாயகனாக புதிய திரைப்படம் ஒன்றில் நடிக்கிறார். இந்த படத்தை இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்குகிறார். இந்த படத்துக்கு இயக்குனர் வெற்றிமாறன் கதை எழுதியுள்ளார். சூரியுடன், சசிகுமார், உன்னி முகுந்தன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இவர்களுக்கு ஜோடியாக ரேவதி சர்மா மற்றும் ஷிவதா நாயர் நடிக்கிறார்கள். மேலும் சமுத்திரக்கனி, மொட்டை ராஜேந்திரன், மைம் கோபி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

லார்க் ஸ்டுடியோஸ் மற்றும் கிராஸ்ரூட் ஃபிலிம் கம்பெனி சார்பில் தயாரிப்பாளர் கே. குமார் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். ஆர்தர் ஏ. வில்சன் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த நிலையில், இந்த படத்தின் பணிகள் கும்பகோணத்தில் பூஜையுடன் நேற்று தொடங்கின. இது தொடர்பான புகைப்படங்களை நடிகர் சூரி தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.