‘மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சி குறித்து ஏ.ஆர். ரகுமான் வேதனை!

‘மறக்குமா நெஞ்சம்’ இசை கச்சேரி நிகழ்வில் நடந்த குளறுபடிகள் குறித்து இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

தமிழ் திரையுலகில் இசைப்புயலாக ரசிகர்களின் மனங்களை ஆட்டி படைத்து வருபவர் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான். இவரது இசையில் மனதை தொலைக்காத ரசிகர்களே இல்லை எனலாம். அந்தளவிற்கு ரசிகர்கள் கொண்டாடும் இசையமைப்பாளராக வலம் வருகிறார் ஏ.ஆர். ரகுமான். இவரின் இசை நிகழ்ச்சி ‘மறக்குமா நெஞ்சம்’ என்ற பெயரில் சென்னை அருகே பனையூர் ஆதித்யராம் பேலஸ் சிட்டியில் நடைபெற்றது. நேற்று முன்தினம் நடைபெற்ற இந்நிகழ்ச்சியை காண ஏராளமான ரசிகர்கள் டிக்கெட் பெற்றிருந்தனர். இதற்காக பல கிலோ மீட்டர் பயணித்து ரசிகர்கள் சென்னைக்கு படையெடுத்தனர். இதனால் நிகழ்ச்சி நடைபெறும் இடம் அருகே ஓ.எம்.ஆர். சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அத்துடன் ஏகப்பட்ட பார்வையாளர்கள் நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் நிரம்பினர்கள். இதனையடுத்து டிக்கெட் பெற்ற பலரும் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. அத்துடன் இந்நிகழ்ச்சியால் பாதிக்கப்பட்டவர்கள் வீடியோக்கள் சோஷியல் மீடியாக்களில் வைரல் ஆனது. இதன் காரணமாக நேற்றில் இருந்து ‘மறக்குமா நெஞ்சம்’ நிகழ்ச்சி மற்றும் ஏ.ஆர். ரஹ்மான் குறித்து பல்வேறு விமர்சனங்கள் சோஷியல் மீடியாவில் முன் வைக்கப்பட்டன. பார்வையாளர்கள் அமர்வதற்கான இருக்கை முதல் பார்கிங் வரையில் பல குளறுபடிகளை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் செய்து விட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது.

இந்த விமர்சனங்களை தொடர்ந்துன் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் தனது எக்ஸ் தளத்தில், ‘அன்பான சென்னை மக்களே துரதிஷ்டவசமான சூழலால் டிக்கெட் இருந்தும் நிகழ்ச்சி நடைபெறும் பகுதிக்குள் நுழைய முடியாத நபர்கள் உங்கள் டிக்கெட் நகலை அனுப்புமாறு மின்னஞ்சல் ஒன்றை குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில் ஏ.ஆர். ரஹ்மான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், என்னை எல்லா நேரத்திலும் சிறந்தவர் (Greatest of All Time GOAT) என அழைக்கிறார்கள். இந்த முறை மக்கள் விழித்து கொள்ள நானே பலியாடு ஆகிறேன். சென்னையில் உலக தர கட்டமைப்பு, சுற்றுலா மேம்பாடு உள்ளிட்டவை சிறந்த விளங்க வாய்ப்புகளை வழங்க வேண்டும். போக்குவரத்து கூட்ட நெரிசலுக்கான மேலாண்மை, விதிகளை பின்பற்றும் ரசிகர்கள் அமைய வேண்டும். இறைவன் நாடினால் நடக்கும் என உருக்கமாக பதிவிட்டுள்ளார் ஏ.ஆர். ரகுமான். அத்துடன் இசை நிகழ்ச்சியில் நடந்த குளறுபடிகளுக்கு நானே பொறுப்பு ஏற்கிறேன். நடந்த சமபவங்களால் நான் மிகவும் வேதனையடைந்தேன். மறக்குமா நெஞ்சம் மக்கள் மனதில் நீண்ட காலம் இருக்கும். ஆனால் நல்ல நினைவுகளுக்காக அல்ல என்றும் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார் ஏ.ஆர். ரகுமான்.