முதியவர் ஆசையாய் போட வந்த சால்வையை தூக்கி எறிந்த சிவகுமார்!

தமிழ் திரையுலகில் மூத்த நடிகராக திகழ்பவர் சிவக்குமார். சினிமா ரசிகர்களால் மார்க்கண்டேயன் நடிகர் கொண்டாடப்பட்டும் இவர் ஏறக்குறைய 175க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் சிவக்குமார் செய்துள்ள ஒரு காரியம் கடும் விமர்சனங்களை கிளப்பியுள்ளது.

கடந்த 1965 ஆம் ஆண்டு வெளியான ‘காக்கும் கரங்கள்’ படம் மூலமாக நடிகராக அறிமுகமான இவர் நடிகர், சொற்பொழிவாளர், மேடை பேச்சாளர் என பல முகங்கள் கொண்டவர். சிவக்குமாரின் மகன்களான சூர்யா, கார்த்தி இருவரும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக திகழ்கின்றனர். சிவக்குமார் தற்போது சில பொது நிகழ்ச்சிகளில் மட்டும் பங்கேற்று வருகிறார். அப்படி அவர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளினால் தொடர்ந்து சர்ச்சைகளிலும் சிக்கி வருகிறார். இந்நிலையில் பழ. கருப்பையா எழுதிய ‘இப்படித்தான் உருவானேன்’ என்ற நூல் வெளியீட்டு விழா சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கண்ணதாசன் மணி மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் நடிகர் சிவக்குமார், பழ. நெடுமாறன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இவ்விழாவில் பங்கேற்ற சிவகுமார் மேடையில் பேசிவிட்டு கீழே இறங்கிய போது, முதியவர் ஒருவர் ஆசை ஆசையாய் ஓடி வந்து சால்வை அணிவிக்க முயன்றார். சிவக்குமார் அதனை பறிங்கி கடும் கோபத்துடன் தூக்கி எறிந்துள்ளார். இதுதொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வர, சிவக்குமாரின் செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே ஒருமுறை இதுபோன்ற பொது நிகழ்ச்சியில் ரசிகர் ஒருவர் தன்னுடன் செல்பி எடுக்க முயன்ற போது, அவரின் போனை தட்டிவிட்டார் சிவக்குமார். அவரின் இந்த செயல்பாடுகளுக்கும் பல்வேறு கண்டனங்கள் குவிந்தது குறிப்பிடத்தக்கது.