உள்நாட்டு விவகாரங்களில் தலையிட வேண்டாம்: ஜோ பைடனுக்கு சீனா எச்சரிக்கை!

சீனாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட வேண்டாம் என, தைவான் விவகாரத்தில், அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு, சீனா மறைமுகமாக எச்சரிக்கை விடுத்துள்ளது.

அண்டை நாடான சீனாவில், கடந்த 1949 ஆம் ஆண்டு நடந்த உள்நாட்டு போருக்கு பிறகு தைவான் என்ற தனி நாடு உருவானது. ஆனாலும் தைவான் தங்கள் நாட்டின் ஒருங்கிணைந்த பகுதி என அதிபர் ஷி ஜின்பிங் தலைமையிலான சீன அரசு கூறி வருகிறது. அது மட்டும் இன்றி தேவை ஏற்பட்டால் தைவானை கைப்பற்ற, படை பலத்தை பயன்படுத்த தயங்க மாட்டோம் எனவும் சீனா கூறி வருகிறது. மேலும், தைவானின் வான் எல்லைக்குள் அவ்வப்போது சீன போர் விமானங்கள் அத்துமீறி நுழைந்து மிரட்டல் விடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளது.

இந்நிலையில் தைவான் மீது சீனா படை எடுத்தால் தைவானை அமெரிக்கா பாதுகாக்கும் என அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் தெரிவித்து உள்ளார். டோக்கியோ வந்துள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளதாவது:-

கிழக்காசிய நாடான தைவானை ஆக்கிரமிக்க சீனா முயன்று வருகின்றது. தைவான் வான் எல்லைகளில், சீன விமானங்கள் அத்துமீறி நுழைகின்றன. மேலும், தீவு நாடான தைவானை, தன் முழு கட்டுப்பாட்டில் வைத்திருக்க, ராணுவத்தையும் தயார் நிலையில் வைத்து உள்ளது. உக்ரைன் மீது தொடர்ந்துள்ள போருக்கு, ரஷ்யா கடும் விலையை கொடுக்க நேரிடும். இதுபோன்ற சூழ்நிலை சீனாவுக்கும் ஏற்படும். தைவானுக்கு இதுவரை நாங்கள் நேரடியாக எந்த உதவியும் செய்ததில்லை. இருப்பினும், மற்றொரு போர் ஏற்படுவதை நாங்கள் விரும்பவில்லை. சீனா அத்துமீறினால், தைவானுக்கு ராணுவ ரீதியில் நாங்கள் அனைத்து உதவிகளும் செய்வோம். இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கு பதிலடி தரும் வகையில், சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் கூறியதாவது:-

தைவான் சீனாவின் எல்லையில் பிரிக்க முடியாத பகுதியாகும். தைவான் விவகாரம் முற்றிலும் சீனாவின் உள் விவகாரம். சீனாவின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு ஆகியவற்றின் முக்கிய நலன்களைத் தொடும் பிரச்னைகளில், சீனா ஒருபோதும் சமரசம் செய்து கொள்ளாது. எங்கள் நாட்டின் இறையாண்மை, பாதுகாப்பை உறுதி செய்ய, 140 கோடி சீனர்கள் தயாராக உள்ளனர். எங்களை யாரும் குறைத்து மதிப்பிட வேண்டாம். தேசிய இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதில் சீன மக்களின் உறுதியான தீர்மானம், உறுதியான விருப்பம் மற்றும் வலுவான திறனை யாரும் குறைத்து மதிப்பிடக் கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.