எருது விடும் விழாவிற்கு, அனுமதி வழங்க வேண்டும்: அண்ணாமலை

எருது விடும் விழாவிற்கு, அனுமதி கோரிய அத்தனை கிராமங்களுக்கும் உடனடியாக அனுமதி வழங்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் எருது விடும் விழாவுக்கு அம்மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்க மறுத்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த இளைஞர்களும், பொது மக்களும் கிருஷ்ணகிரி – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் பேருந்து கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. போலீசாருக்கு காயம் ஏற்பட்டது. இதனால் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர போலீசார் தடியடி நடத்தியும், தண்ணீரை பீய்ச்சு அடித்தும், கண்ணீர் புகை குண்டுகள் வீசியும் போராட்டக்காரர்களை அப்புறப்படுத்தினர். இது தொடர்பாக 200 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், எருது விடும் விழாவிற்கு, அனுமதி கோரிய அத்தனை கிராமங்களுக்கும் உடனடியாக அனுமதி வழங்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக டுவிட்டரில் அவர் கூறி இருப்பதாவது:-

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள கிராமங்களில், ஆண்டு தோறும் பொங்கல் பண்டிகையை ஒட்டி, எருது விடும் விழாவிற்கு, பொங்கல் தினம் தொடங்கி, பல வாரங்களாக அனுமதி கேட்டும், அனுமதி கொடுக்காமல் இழுத்தடித்துக் கொண்டிருக்கிறது திறனற்ற திமுக அரசு. அனுமதி கொடுப்பதும், மறுபடியும் தடை செய்வதுமாக கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருப்பதால் ஓசூர் கிருஷ்ணகிரி சாலையில், பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதும், தற்போது, மீண்டும் அனுமதி கொடுத்திருக்கிறார்கள். திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் தலைமையிலான அரசு ஜல்லிக்கட்டை தடை செய்தது போல, தமிழர்களின் கலாச்சார விழாக்களை ஒவ்வொன்றாகத் தடை செய்வதே திமுகவின் நோக்கமாக இருக்கிறது. இவர்கள் ஆட்சிக்கு வரும் முன், எருது விடும் விழா தடை செய்யப்படாது என்று கூறிவிட்டு, தற்போது ஆட்சிக்கு வந்ததும் தடை விதிக்க முற்படுகின்றனர்.

போராட்டம் நடத்தித்தான் காலாகாலமாக நடந்து வரும் விழாக்களுக்கு அனுமதி பெற வேண்டும் என்ற நிலைக்குப் பொதுமக்களைத் தள்ள வேண்டாம் என்றும், எருது விடும் விழாவிற்கு, அனுமதி கோரிய அத்தனை கிராமங்களுக்கும் உடனடியாக அனுமதி வழங்க வேண்டும் என்றும் திமுக அரசை எச்சரிக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.