தமிழ்நாடு அரசு மக்கள் பிரச்சனைகளை கவனத்தில் கொள்ள வேண்டும்: எடப்பாடி பழனிச்சாமி

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் வழக்கமாக நடக்கும் எருதுவிடும் விழாவிற்கு காரணமே இன்றி அனுமதி மறுத்து மக்கள் போராட்டத்திற்கு வித்திட்டுள்ள தமிழ்நாடு அரசுக்கு இன்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர் அருகே கோபசந்திரம் பகுதியில் சின்ன திருப்பதி கோவில் திருவிழாவையொட்டி இன்று எருதுவிடும் விழாவை நடத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால் எருதுவிடும் விழாவை நடத்துவதற்கு உாிய அனுமதி பெறவில்லை என்று கூறப்படுகிறது. ஆனால் எருதுவிடும் விழாவிற்காக காலி இடத்தை சீரமைத்து, தடுப்புகள் மற்றும் மேடை அமைக்கப்பட்டு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தது. இந்த எருதுவிடும் விழாவுக்காக 100க்கும் மேற்பட்ட காளைகள் அழைத்து வரப்பட்டன. அதுமட்டுமல்லாமல் எருதுவிடும் விழாவில் பங்கேற்று எருதுகளை பிடிப்பதற்காக எராளமான இளைஞர்களும் திரண்டனர். ஆனால் எருதுவிடும் விழாவை நடத்த மாவட்ட நிர்வாகத்திடம் முறையான அனுமதி பெறாததால் தடை விதிக்கப்பட்டது. பின்னர் எருதுவிடும் விழா நடக்கவிருந்த இடத்தில் வந்த அதிகாரிகளும், காவல்துறையினரும் விழாவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதை கூறி அனைவரையும் கலைந்து செல்ல அறிவுறுத்தினர். இதனால் அப்பகுதியில் திரண்டிருந்த இளைஞர்கள் ஆத்திரம் அடைந்தனர். இதனிடையே திடீரென கிருஷ்ணகிரி- ஓசூர் சாலையில் திரண்ட இளைஞர்கள் சாலையின் நடுவே கற்களை கொட்டி போக்குவரத்தை முடக்கினர். மேலும் அவ்வழியாக வந்த வாகனங்களை மறித்து அவற்றின் மீது ஏறி நின்று மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். இதையடுத்து போலீசார் தடியடி நடத்தி அவர்களை அங்கிருந்து விரட்டி அடித்தனர்.

இந்த நிலையில் இளைஞர்களின் போராட்டத்தின் எதிரொலியாக மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திரபானு ரெட்டி எருதுவிடும் விழா நடத்த அனுமதி வழங்கி உத்தரவிட்டார். ஆனாலும் போராட்டம் முடிவுக்கு வரவில்லை. கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் எருது விடும் விழா நடத்த அனுமதிக்க வேண்டும் என்று கூறி போராட்டத்தை தொடர்ந்தனர். அதுமட்டுமல்லாமல் ஏராளமான அரசு பேருந்துகள், லாரிகள், கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் மீது கல்வீசி தாக்கியதில் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின. இதனால் மீண்டும் அவர்களை கலைக்க போலீசார் தடியடி நடத்தினர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் போலீசார் மீது கல்வீசினர். இதில் போலீசார் சிலருக்கு மண்டை உடைந்து காயம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து கண்ணீர் புகை வீசி கூட்டம் கலைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நெடுஞ்சாலையில் வாகன போக்குவரத்து சீரானது.

இதற்கு தமிழ்நாடு அரசின் நடவடிக்கையே காரணம் என்று எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது டுவிட்டர் பக்கத்தில், கிருஷ்ணகிரி, சூளகிரியில் வழக்கமாக நடக்கும் எருதுவிடும் திருவிழாவிற்கு காரணமேயின்றி அனுமதி மறுத்து, ஓசூர் நெடுஞ்சாலையே ஸ்தம்பித்துப் போகும் அளவு மக்கள் போராட்டத்திற்கு வித்திட்டுள்ள இந்த அரசுக்கு எனது கடும் கண்டனங்கள். கண்ணீர்புகை வீசி கட்டுப்படுத்தும் அளவிற்கு போராட்டம் வலுத்திருப்பதை உணர தவறியது உளவுத்துறையின் தோல்வி. மக்கள் பிரச்சனைகளை கவனத்தில் கொள்ள வேண்டுமென இந்த நிர்வாக திறமையற்ற விடியா அரசை வலியுறுத்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.