குற்றச் செயல்களை கண்டறிய நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறோம்: சைலேந்திரபாபு!

பேஸ் ஐ.டி.சிஸ்டம் மூலம் இந்த ஆண்டு இதுவரை 5,500 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றச் செயல்களை கண்டறிய நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறோம் என்று போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு கூறினார்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் போலீஸ் நிலையத்திற்கு போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு வந்தார். அவருக்கு போலீஸ் சூப்பிரண்டு சசாய் சாய் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். பிறகு போலீசாரின் மரியாதையை ஏற்றுக் கொண்டார். பின்னர் போலீஸ் நிலைய பதிவேடுகள் பராமரிப்பது குறித்து ஆய்வு செய்தார். இதையடுத்து தாராபுரம் நகர் முழுவதும் பொருத்தப்பட்டுள்ள 252 கண்காணிப்பு கேமரா கட்டுப்பாட்டு அறையை பார்வையிட்டார். பின்னர் துணை சூப்பிரண்டு அலுவலகத்திற்கு சென்று மரக்கன்று ஒன்றை நட்டு வைத்தார். அப்போது சிறந்த முறையில் பதிவேடுகளை பராமரிப்பு செய்த ஏட்டு ஆசாத் என்பவரை பாராட்டி அவருக்கு ரொக்கப் பரிசு கொடுத்து கவுரவப்படுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கண்காணிப்பு கேமரா பொருத்தப்படுவதால், திருட்டு, ஆள் கடத்தல் போன்ற குற்றச் செயல்களை உடனடியாக கண்டறிய முடியும். தமிழ்நாடு காவல்துறை குற்றச் செயல்களை கண்டறிய நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வருகிறது. சென்னையில் உள்ள போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு வரும் தகவல்களை உள்ளூர் போலீஸ் நிலையங்களுக்கு அனுப்பி உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பேஸ் ஐடி சிஸ்டம் மூலம் இந்த ஆண்டு 5,500 குற்றவாளிகளை அடையாளம் கண்டுபிடித்து வழக்கு பதிவு செய்துள்ளோம். பழைய ஏ, ஏ பிளஸ் குற்றவாளின் நடவடிக்கையை கண்காணிக்க கே.வி.டிராக் ஏற்ற புதிய செயலியை கொண்டு வந்துள்ளோம்.

மேலும் ஆபத்து காலத்திலோ, பாதுகாப்பில்லாத சூழலிலோ காவல்துறையை எளிதாகவும், விரைவாகவும் அணுகும் விதத்தில் புதிதாக உருவாக்கப்பட்டிருக்கிறது காவல் உதவி என்னும் செயலி. ஏற்கெனவே காவலன் எஸ்ஓஎஸ் எனும் செயலி பயன்பாட்டில் உள்ள நிலையில் காவல் உதவி செயலியில் பல சிறப்பு அம்சங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன. 66 சிறப்பம்சங்களைக் கொண்டுள்ள இதனை கூகுள் ப்ளே ஸ்டோரில் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அவசர காலங்களில் உதவி தேவைப்படும் பெண்கள் அதில் இருக்கும் சிவப்பு நிற பொத்தானை அழுத்துவதன் மூலம், உதவி வேண்டுவோரின் விவரம், இருப்பிடம் உள்ளிட்டவை போலீசார் கட்டுப்பாட்டு அறைக்கு விரைவாக கிடைக்கும் வகையில் இச்செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆபத்து காலத்தில், காவல்துறையை எளிதாக அணுகுவதற்கு இதனைப் பயன்படுத்த பொதுமக்கள் இந்த (பிப்ரவரி) மாதத்திலிருந்து டவுன்லோட் செய்யாதவர்கள் டவுன்லோட் செய்து பயன்படுத்த வேண்டும்.

இருசக்கர வாகனங்களில் சாகசம் செய்யும் இளைஞர்கள் பொது இடங்களில் சாகசம் செய்வது தடுக்கப்பட வேண்டியது. அவர்களுக்கு என தனியான சாகச பயிற்சி மையங்கள் இருக்கின்றன. அந்த மையங்களில் சென்று இளைஞர்கள் தங்களது திறமையை வளர்த்துக் கொள்ளலாம். மேலும் பொது மக்களுக்கு இடையூறாக சாகசம் செய்வது குற்ற செயல். இவ்வாறு அவர் கூறினார்.