ராணுவ வீரர் படுகொலை: ஆளுநரிடம் புகார் அளித்த அண்ணாமலை!

கிருஷ்ணகிரி ராணுவ வீரர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆளுநரை நேரில் சந்தித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை புகார் அளித்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குடி தண்ணீர் தொட்டி அருகே துணி துவைத்த ராணுவ வீரருக்கும், திமுக கவுன்சிலருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, ராணுவ வீரர் பிரபு கொல்லப்பட்டார். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த போராட்டத்தை கையிலெடுத்த பாஜக ராணுவ வீரர் பிரபு மரணத்திற்கு நீதி கேட்டு சென்னையில் உண்ணாவிரதப் போராட்டத்தை நேற்று நடத்தியது. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்ற போராட்டத்தைத் தொடர்ந்து மாலையில் சென்னை ஓமந்தூரார் மருந்துவமனையில் இருந்து போர்நினைவு சின்னம் வரை மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி நடைபெற்றது.

பாஜகவின் மேடைகளில் அவ்வப்போது சர்ச்சைக்குரிய வகையில் யாரேனும் பேசி கவனத்தை தங்கள் பக்கம் ஈர்த்து வருகின்றனர். அந்த வகையில் நேற்றும் ஒரு சர்ச்சை சம்பவம் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய ஓய்வு பெற்ற கர்னல் பாண்டியன், “ராணுவ வீரர்களை சீண்டினால் அது தமிழகத்திற்கும், தமிழக அரசுக்கும் நல்லதல்ல. இந்திய ராணுவ வீரர்களுக்கு நன்றாக சுடவும் தெரியும், குண்டு வைக்கவும் தெரியும். ஆனால், நாங்கள் அதை ஒருபோதும் செய்யப்போவதில்லை. எங்களை சீண்டிப்பார்த்தால் தமிழகத்தில் சட்ட ஒழுங்கு கெட்டுவிடும்” என்று பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்தார்.

உண்ணாவிரதப் போராட்டத்தை தொடர்ந்து பாஜகவினர் பேரணி சென்றனர். அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை, “ராணுவ வீரர் பிரபு குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணத்தொகை பாஜக சார்பில் வழங்கப்படும். அவர்களின் பிள்ளைகளின் படிப்பு செலவையும் பாஜக ஏற்கும். ராணுவ வீரரின் குடும்பத்திற்கு பாஜக அரணாக இருக்கும் என்று கூறினார்.

பேரணியை தொடர்ந்து பாஜக மாநிலை தலைவர் அண்ணாலை நேற்று இரவு 7 மணிக்கு கிண்டி ஆளுநர் மாளிகையில் ஆர்.என்.ரவியை சந்தித்து பேசினார். அப்போது ராணுவ வீரர் படுகொலை தொடர்பாக ஆளுநரிடன் புகார் அளித்துள்ளார். இந்த சந்திப்பின் போது குண்டு வைப்போம் என மிரட்டல் விடுத்த கர்னல் பாண்டியனும் உடனிருந்தார்.