உக்ரைனுக்கு எப்-16 போர் விமானங்களை வழங்க தயார்: டென்மார்க்

உக்ரைனுக்கு எப்-16 ரக போர் விமானங்களை வழங்க தயாராக இருப்பதாக டென்மார்க் அறிவித்துள்ளது.

உக்ரைன்-ரஷ்யா போரில் அமெரிக்கா மற்றும் பல்வேறு ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு ஏராளமான ஆயுதங்களை வழங்கி வருகின்றன. அதன் ஒரு பகுதியாக உக்ரைனுக்கு போர் விமானங்களை வழங்க வேண்டுமென அந்த நாட்டின் அதிபர் ஜெலன்ஸ்கி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். ஆனால் அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் போர் விமானங்களை வழங்க தயக்கம் காட்டி வருகின்றன. இந்த நிலையில் ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான டென்மார்க் உக்ரைனுக்கு எப்-16 ரக போர் விமானங்களை வழங்க தயாராக இருப்பதாக அறிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த நாட்டின் ராணுவ மந்திரி டிரோல்ஸ் லண்ட் பால்சன் கூறுகையில், “உக்ரைன்-ரஷ்யா போரில் ஒரு கட்டத்தில் போர் விமானங்களின் பங்களிப்பு என்பதை மறுக்க முடியாது. எனவே ரஷ்யாவின் படையெடுப்புக்கு எதிரான உக்ரைனின் தற்காப்புக்கு உதவ எப்-16 ரக போர் விமானங்களை வழங்க டென்மார்க் அரசு தயாராக இருக்கிறது” என்றார்.