ஜெர்மன் அதிபர் ஓலாஃப் ஷோல்ஸ் இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்தார்!

ஜெர்மன் அதிபர் இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். உற்சாகமாக வரவேற்றார் பிரதமர் மோடி.

இந்தியா ஜெர்மனி இடையே கடந்த சில ஆண்டுகளாக ராஜதந்திர உறவுகள் மேம்பட்டு வருகின்றன. அதன் ஒருபகுதியாக கடந்த ஆண்டு மே 2ம் தேதி, ஜெர்மனியின் பெர்லினில் நடைபெற்ற 6வது இந்தியா-ஜெர்மனி அரசுகளுக்கிடையேயான ஆலோசனைக்காக (ஐஜிசி) பிரதமர் மோடி சென்றிருந்தபோது, ஜெர்மன் அதிபருடன் முதல்முறையாக பேச்சுவார்த்தை நடத்தினார். அதைத் தொடர்ந்து ஜூன் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் தெற்கு ஜெர்மனியில் உள்ள அல்பைன் கோட்டையான ஸ்க்லோஸ் எல்மாவுக்கு பிரதமர் மோடி வருகை தந்து, G7 குழுவின் வருடாந்திர உச்சி மாநாட்டில் கலந்து கொண்டார். ஜெர்மன் அதிபர் தலைமையில் நடைபெற்ற G7 உச்சிமாநாட்டிற்கு பிரதமர் மோடியை அதிபர் ஸ்கோல்ஸ் அழைப்பு விடுத்ததை அடுத்து பிரதமர் மொடி கலந்து கொண்டார்.

அதேபோல் மூன்றாவது முறையாக கடந்த ஆண்டு நவம்பர் 16ம் தேதி இந்தோனேஷியாவில் நடைபெற்ற ஜி20 மாநாட்டில், பிரதமர் மோடியும் அதிபர் ஷோல்ஸும் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த சந்திப்பின் போது பொருளாதார விவகாரங்கள் மற்றும் பிற முக்கிய விவகாரங்கள் குறித்து பேசப்பட்டது. இத்தகைய வகையில் இந்தியா மற்றும் ஜெர்மனி இடையேயான உறவு மேம்பட்டு வருகிறது. மேலும் சமீபத்தில் ஜெர்மனி நாட்டின் பாதுகாப்பு ஆலோசகருடன் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆலோசனை மேற்கொண்டார். இதில் இந்தோ – பசிபிக் பிராந்தியங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

இந்தநிலையில் ஜெர்மன் அதிபர் ஓலாஃப் ஷோல்ஸ் இரண்டு நாள் பயணமாக இன்று இந்தியா வந்தடைந்தார். 2021 டிசம்பரில் ஜெர்மன் அதிபராக பதவியேற்ற பிறகு, அதிபர் ஸ்கோல்ஸ் முதல்முறையாக இந்தியா வந்துள்ளார். பிரதமர் மோடி ராஷ்டிரபதி பவனில் அதிபர் ஷோல்ஸை வரவேற்றார், அங்கு ஜெர்மன் தலைவருக்கு சம்பிரதாய வரவேற்பு அளிக்கப்பட்டது. தூய்மையான எரிசக்தி, வர்த்தகம் மற்றும் புதிய தொழில்நுட்பங்கள் ஆகிய துறைகளில் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜெர்மன் அதிபர் ஓலாஃப் ஷோல்ஸ் ஆகியோர் இன்று விரிவான பேச்சுவார்த்தை நடத்தினர். காலை 11:50 மணியளவில் மோடி-ஸ்கோல்ஸ் பேச்சுவார்த்தை தொடங்கியது.

இது குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி தனது டுவிட்டர் பதிவில், “அதிபர் ஸ்கோல்ஸின் வருகை பன்முகத்தன்மை கொண்ட இந்தியா-ஜெர்மனி மூலோபாய கூட்டாண்மையை மேலும் ஆழப்படுத்த ஒரு வாய்ப்பாகும். இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துதல், பசுமை மற்றும் நிலையான வளர்ச்சி கூட்டாண்மை மற்றும் பொருளாதார ஒத்துழைப்பைவ கட்டியெழுப்புதல் மற்றும் பாதுகாப்பில் நெருக்கமான உறவுகளை உருவாக்குதல் ஆகியவற்றில் பேச்சுக்களின் கவனம் இருக்கும்” என்று அவர் கூறினார்.

இரு தலைவர்களுக்கிடையிலான கலந்துரையாடலில், ரஷ்யா-உக்ரைன் மோதல் மற்றும் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் நிலைமை ஆகியவை விவாதங்களில் முக்கிய இடத்தைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். வர்த்தகம், பாதுகாப்பு, தூய்மையான எரிசக்தி, பருவநிலை மாற்றம் மற்றும் புதிய தொழில்நுட்பங்கள் ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்தும் பேச்சுவார்த்தையில் கவனம் செலுத்தப்படும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

இதன்பின்னர், டெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் இரு நாட்டு தலைவர்களும் கூட்டாக பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தினர். இதில் பிரதமர் மோடி பேசும்போது, ஐரோப்பிய பகுதியில் மிக பெரிய வர்த்தக நட்புறவு நாடாக ஜெர்மனி உள்ளதுடன், இந்தியாவில் முதலீடு செய்யும் முக்கிய நாடுகளில் ஒன்றாகவும் உள்ளது. இந்தியா மற்றும் ஜெர்மனி ஆகிய இரு நாடுகளின் வலுவான உறவுகள், பரஸ்பர நலன்களுக்கான ஜனநாயக மதிப்புகளை பகிர்ந்து கொள்ளும் விசயங்களை அடிப்படையாக கொண்டவை என பிரதமர் மோடி பேசியுள்ளார்.

கடந்த சில ஆண்டுகளாக, இரு நாடுகளை சேர்ந்த மக்களுக்கு இடையேயான உறவுகள் சிறந்த முறையில் மேம்பட்டு உள்ளன. மேக் இன் இந்தியா மற்றும் ஆத்மநிர்பார் பாரத் பிரசாரங்களால், அனைத்து பிரிவுகளிலும் புதிய வாய்ப்புகள் திறக்கப்பட்டு உள்ளன. இந்த வாய்ப்புகளின் மீது ஜெர்மனி கொண்ட ஆர்வங்களால் நாங்கள் ஊக்கமடைந்து உள்ளோம். இந்தியா மற்றும் ஜெர்மனி நாடுகளின் உறவானது, இரு நாடுகள் இடையேயான ஆழம் வாய்ந்த புரிதலை அடிப்படையாக கொண்டவை. வர்த்தக பரிமாற்ற வரலாற்றையும் நாம் கொண்டுள்ளோம். ஐரோப்பிய நாடுகளில் மிக பெரிய வர்த்தக உறவுக்கான நாடாக ஜெர்மனி திகழ்கிறது என்று பிரதமர் மோடி பேசும்போது குறிப்பிட்டு உள்ளார்.

இந்த பயணத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்முவை, ஜெர்மனி அதிபர் ஸ்கால்ஸ் சந்தித்து பேசுகிறார். இரு நாட்டு தலைவர்களும் பரஸ்பரம் இருதரப்பிலான தலைமை செயல் அதிகாரிகள் மற்றும் வர்த்தக தலைவர்களுடன் உரையாடுகின்றனர். இதனை தொடர்ந்து ஜெர்மனி அதிபர் கர்நாடகாவின் பெங்களூரு நகருக்கு நாளை செல்ல இருக்கிறார். 2-ம் உலக போருக்கு பின்னர் ஜெர்மனி மத்திய குடியரசு நாட்டுடன் தூதரக அளவிலான நட்புறவை மேற்கொண்ட முதல் நிலை நாடுகளில் இந்தியாவும் ஓன்று. இந்தியா மற்றும் ஜெர்மனி இடையே பொதுவான ஜனநாயக கொள்கைகளின்படி இருதரப்பு உறவுகள் உருவாக்கப்பட்டன. இந்தியாவுடன் இணைந்து ஜெர்மனி ஆண்டுக்கு 1,300 கோடி யூரோ மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களில் ஈடுபடுகிறது. அவற்றில் 90 சதவீதம் அளவுக்கு, இயற்கை வளங்களை பாதுகாப்பது மற்றும் தூய்மையான மற்றும் பசுமை ஆற்றலை ஊக்குவிக்கும் வகையில், பருவநிலை மாற்றத்திற்கு எதிராக போராடும் நோக்கங்களை கொண்டவை ஆகும்.