சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக்கோரி பிரதமர் மோடிக்கு கார்கே கடிதம்!

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக்கோரி பிரதமர் மோடிக்கு மல்லிகார்ஜுன கார்கே கடிதம் எழுதி உள்ளார்.

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கர்நாடக மாநிலம் கோலாரில் நேற்று முன்தினம் பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல்காந்தி கோரிக்கை விடுத்தார். இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவும் அதே கோரிக்கையை விடுத்துள்ளார். நேற்று இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் மல்லிகார்ஜுன கார்கே கூறி இருப்பதாவது:-

தற்காலத்திய சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்ற இந்திய தேசிய காங்கிரசின் கோரிக்கையை மீண்டும் முன்வைக்க இந்த கடிதத்தை எழுதுகிறேன். மற்ற எதிர்க்கட்சி தலைவர்களை போல், நானும், என் சகாக்களும் எத்தனையோ தடவை நாடாளுமன்றத்தில் இக்கோரிக்கையை எழுப்பி இருக்கிறோம். நாட்டிலேயே முதல்முறையாக 2011-2012-ம் ஆண்டில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, வழக்கமான மக்கள்தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தியது. ஆனால், சாதிவாரி விவரங்கள் வெளியிடப்படவில்லை. 2014-ம் ஆண்டு மே மாதம், உங்களது ஆட்சி வந்த பிறகு, காங்கிரஸ் கட்சி எத்தனையோ தடவை கேட்ட பிறகும் அந்த விவரம் வெளியிடப்படவில்லை.

தற்காலத்திய சாதிவாரியிலான புள்ளி விவரங்கள் இருந்தால்தான், இதர பிற்படுத்தப்பட்டோர் உள்ளிட்ட சமூகத்தினருக்கு அர்த்தமுள்ள சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் திட்டங்களை திறம்பட நிறைவேற்ற முடியும். அந்த விவரங்கள் இல்லாததால், அத்திட்டங்கள் அரைகுறையாகவே இருக்கும். மக்கள்தொகை கணக்கெடுப்பு 10 ஆண்டுகளுக்கு ஒருதடவை நடத்தப்படும் வழக்கமான மக்கள்தொகை கணக்கெடுப்பு, 2021-ம் ஆண்டு நடத்தப்பட்டிருக்க வேண்டும். அதுவும் இன்னும் நடத்தப்படவில்லை. மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவது மத்திய அரசின் பொறுப்பு. ஆகவே, மத்திய அரசு உடனடியாக மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும். அதில், சாதிவாரி கணக்கெடுப்பு விவரங்களும் இடம்பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.