தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக நடிகை விஜயலட்சுமி வீடியோ வெளியீடு!

சீமானின் தொல்லையால் தானும், தனது அக்காவும் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக நடிகை விஜயலட்சுமி வீடியோ வெளியிட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இதுதான் தனது கடைசி வீடியோ என்றும் அவர் கூறியுள்ளதால் பதற்றம் அதிகரித்துள்ளது.

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொண்டு, பின்னர் ஏமாற்றி சென்றுவிட்டதாக நடிகை விஜயலட்சுமி கடந்த பல ஆண்டுகளாக வீடியோ வெளியிட்டு வந்தார். இந்த சூழலில், கடந்த மாதம் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு நேரில் வந்து சீமான் மீது அவர் புகார் அளித்தார். மேலும், நீதிமன்றத்திலும் அவர் சாட்சியம் அளித்ததால் கிட்டத்தட்ட சீமான் கைது செய்யப்படும் சூழல் ஏற்பட்டது.

இந்நிலையில், தனது புகாரை விஜயலட்சுமி திரும்பப் பெற்றார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், “சீமானை எதிர்த்து போராட எனக்கு யாரும் துணையாக இல்லை. எனவே இந்த பிரச்சினையை நானே முடித்துக் கொள்கிறேன். சீமான் சந்தோஷமாக இருக்கட்டும். நான் பெங்களூருக்கே போகிறேன். திரும்பி வர மாட்டேன்” என்றார். அதே சமயத்தில், சீமான் தரப்பில் பேசிய வழக்கறிஞர்கள் சிலர், விஜயலட்சுமி மீது மான நஷ்ட வழக்கு போடப் போவதாக தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து, கடந்த 2 நாட்களாக விஜயலட்சுமி வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். ஒரு வீடியோவில் பேசிய விஜயலட்சுமி, “இந்த போர் இன்னும் முடியல சீமான். உங்களுக்கு எதிராக பல ஆதாரங்களை கொண்டு வருகிறேன்” எனக் கூறியிருந்தார்.

இந்த சூழ்நிலையில், நேற்று இரவு (செப்.22) ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார் விஜயலட்சுமி. அதில், “சாட்டை துரைமுருகன் கூறியதால் பாலசுப்பிரமணியன் என்ற வக்கீல் வந்து என்னை பெங்களூருக்கு அனுப்பி வைத்தார். மற்றபடி அவர் யாரென்றே எனக்கு தெரியாது. அவர் இப்போது என்னை பற்றி அசிங்கமாக ஊடகங்களில் பேசி வருகிறார். சீமான் இதை தடுக்கவில்லை என்றால் ஒரே செகண்டுதான்.. நானும் அக்காவும் எங்க கதையை முடிச்சுக்குவோம். அப்படி நாங்க செத்துட்டோம்னா சீமானை யாராலுமே காப்பாற்ற முடியாது. அவரோட அரசியல் வாழ்க்கையும் முடிஞ்சு போயிரும்” எனக் கூறினார்.

சிறிது நேரம் கழித்து மறுபடியும் ஒரு வீடியோவை விஜயலட்சுமி வெளியிட்டார். அதில், அவரும், அவரது அக்காவும் சாப்பாடு, தண்ணீர் இல்லாமல் உண்ணாவிரதம் இருந்து சாகப் போவதாகவும், தங்கள் சாவுக்கு சீமான் மட்டுமே காரணம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், தாங்கள் இறந்துபோனால் சீமானை போலீஸார் விடக்கூடாது என்றும், இதுதான் அவர் வெளியிடும் கடைசி வீடியோ எனவும் விஜயலட்சுமி கூறியுள்ளார்.