காவிரி பிரச்சனையால் பெங்களூரில் 26ம் தேதி பந்த் அறிவிப்பு!

தமிழ்நாட்டுக்கு காவிரியில் தண்ணீர் வழங்குவதை எதிர்த்து பெங்களூரில் வரும் 26ம் தேதி பந்த் நடத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் மொத்தம் 100க்கும் அதிகமான அமைப்பை சேர்ந்தவர்கள் பங்கேற்க உள்ளதாக கூறப்படுவதால் அன்றைய தினம் ஒட்டுமொத்த பெங்களூரும் முடங்க உள்ளது.

தமிழ்நாடு-கர்நாடகா இடையே காவிரி நீர் பங்கீடு செய்வதில் பிரச்சனை உள்ளது. இந்நிலையில் தான் கடந்த திங்கட்கிழமை காவிரி மேலாண்மை ஆணையம் சார்பில் தமிழகத்துக்கு 15 நாட்கள் 5 ஆயிரம் கனஅடி நீர் திறந்து விட உத்தரவிடப்பட்டது. இதனை எதிர்த்து கர்நாடகா அரசு சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம் தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க உத்தரவிட்டது. இதனை கண்டித்து கேஆர்எஸ் அணை இருக்கும் மண்டியா மாவட்டத்தில் இன்று பந்த் நடந்து வருகிறது. கடைகள், பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளது. அதேபோல் பெங்களூர் நகரிலும் ஆனந்தராவ் சர்க்கிள், சுதந்திர பூங்கா, மைசூர் வங்கி சர்க்கிளில் கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்தினர். காலி குடங்கள், மண்பாணைகளுடன் ஏராளமானவர்கள் போராட்டத்தில் பங்கேற்றனர். அதேபோல் தமிழ்நாடு, கர்நாடகா எல்லையான அத்திபள்ளியிலும் கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்தி வாகனங்களை தடுக்க முயன்று கைது செய்யப்பட்டனர்.

இதற்கிடையே தான் தமிழ்நாட்டுக்கு காவிரியில் தண்ணீர் திறக்கும் கர்நாடகா அரசை கண்டித்து பெங்களூரில் பந்த் நடத்துவது குறித்து பல்வேறு விவசாய அமைப்புகள், வியாபார சங்கங்கள், கன்னட அமைப்பை சேர்ந்தவர்கள் இன்று ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனை 2 மணிநேரம் நடந்தது. ஆலோசனை முடிவில் வரும் 26ம் தேதி பெங்களூரில் பந்த் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அன்றைய தினம் பெங்களூரில் பள்ளி, கல்லூரிகள், கடைகள், வணிக நிறுவனங்கள், பெட்ரோல் விற்பனை நிலையங்களை மூட அழைப்பு விடுக்க திட்டமிட்டப்பட்டுள்ளது. மேலும் பந்த் போராட்டத்தை வெற்றிகரமாக முடிக்கவும் இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதற்காக சுமார் 100க்கும் அதிகமான அமைப்புகள் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பந்த்துக்கு ஆதரவு வழங்கும்படி தற்போது பல்வேறு அமைப்புகளுக்கு கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. இந்த பந்துக்கும் பாஜக மற்றும் முன்னாள் முதல்வர் குமாரசாமியின் ஜேடிஎஸ் கட்சி முழு ஆதரவு வழங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்நிலையில், தமிழகத்துக்கு காவிரி நீர் வழங்க எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் மாநிலம் தழுவிய போராட்டத்தில் பாஜக இன்று ஈடுபட்டது. பெங்களூருவில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற பாஜக தலைவரும், அம்மாநில முன்னாள் முதல்வருமான பசவராஜ் பொம்மை, “கர்நாடகாவில் போதுமான மழை பொழியாத நிலையில், தமிழகத்துக்கு காவிரி நீரை வழங்குவது கர்நாடகாவின் நலனுக்கு எதிரானது. தமிழகத்துக்கு காவிரியில் இருந்து தண்ணீர் திறக்கும் மாநில அரசை கண்டித்து மாநிலம் முழுவதும் இன்று பாஜக சார்பில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. கர்நாடகாவில் உற்பத்தியாகும் நதி காவிரி. எனவே, காவிரி கர்நாடகாவுக்கே சொந்தம். இது தமிழகத்தின் சொத்து அல்ல. இருந்தபோதும், அவர்கள் காவிரி நீரை பெற்று வருகிறார்கள். கர்நாடகா அணைகளைக் கட்டியதால்தான் தமிழகத்துக்கு தற்போது தண்ணீர் திறக்க முடிகிறது” என்று தெரிவித்தார்.

மாண்டியாவில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற பாஜக தலைவர் சி.டி. ரவி, “காவிரி நீர் தமிழகத்துக்கு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாண்டியா மாவட்டத்தில் இன்று முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது. விவசாய சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ள இந்த முழு அடைப்புக்கு பாஜகவின் ஆதரவை தெரிவிக்கவே நான் இங்கு வந்துள்ளேன். இண்டியா கூட்டணியை வலுப்படுத்தவே கர்நாடக காங்கிரஸ் அரசு தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கிறது. காவிரி நீரை திறந்து விடுவதன் மூலம் காங்கிரஸ் தங்கள் கூட்டணியை பாதுகாக்கிறது” என குற்றம் சாட்டினார்.

மாண்டியாவில் முழு அடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதை அடுத்து அம்மாவட்டத்தில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தின் பல பகுதிகளிலும் கடைகள், வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதால் சாலைகளில் வாகன போக்குவரத்து குறைவாகவே உள்ளது. மாவட்டத்தில் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நேராமல் இருப்பதற்காக மாண்டியா மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.