இமாச்சல் முதல்வருக்கு எதிராக மாநில காங்கிரஸ் தலைவர் பிரதிபா சிங் போர்க்கொடி!

இமாச்சலப் பிரதேசத்தில் அனல் பறக்கும் அரசியல் நகர்வுகள் நடந்த வண்ணம் உள்ளன. இன்று (பிப்.29) காலையில் கட்சி மாறி வாக்களித்த காங்கிரஸ் எம்எல்ஏ.க்கள் 6 பேரை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்த நிலையில், முதல்வருக்கு எதிராக மாநில காங்கிரஸ் தலைவர் பிரதிபா சிங் போர்க்கொடி உயர்த்தியுள்ளார்.

இமாச்சலப் பிரதேச மாநில காங்கிரஸ் தலைவரும் இமாச்சல பிரதேச முன்னாள் முதல்வர் வீரபத்திர சிங் மனைவியுமான பிரதிபா சிங் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மாநிலங்களவைத் தேர்தலில் அந்த 6 எம்எல்ஏ.க்கள் கட்சி மாறி வாக்களித்தனர். அவர்கள் வருத்தத்தில் இருந்தனர். ஏன் அவர்களுக்கு வருத்தம் இருக்காது என சிந்திக்க வேண்டும். ஓராண்டுக்கும் மேலாகியும் அவர்கள் குரல்களுக்கு செவிசாயக்கப்படவில்லை. அவர்களை என்றேனும் அழைத்து மேலிடம் பேசியிருக்கிறதா? அவர்களிடம் பேசி பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டிருந்தால் இந்த நிலைமையே ஏற்பட்டிருக்காது.

நாங்கள் என்ன முடிவெடுத்தாலும் அதற்கு இமாச்சலப் பிரதேச மக்கள் உடன்படுவார்கள். அவர்களுக்கு வீரபத்திர சிங்கின் பெருமை தெரியும். வீரபத்திர சிங் கனவை நோக்கி தான் நாங்கள் பயணிக்கிறோம். நாங்கள் பலமுறை கட்சி மேலிடத்தில் பேசியிருக்கிறோம். ஆனால், எங்களின் கோரிக்கைகளுக்கு எந்தப் பதிலும் இல்லை. எனது மகன் விக்ரமாதித்ய சிங் தனது ராஜினாமா முடிவில் உறுதியாக இருக்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக, நேற்று விக்ரமாதித்ய சிங் அளித்தப் பேட்டியில், “நான் ராஜினாமா குறித்து மேலிடத்துக்கு அழுத்தம் தரப்போவதில்லை. பேச்சுவார்த்தைகள் நடக்கின்றன. கட்சி மேலிடப் பார்வையாளர்கள் வந்துள்ளனர். நாங்கள் ஆலோசித்து வருகிறோம். இமாச்சலப் பிரதேசம் ஒரு தேவ பூமி. நான் அயோத்தி சென்று ராமர் ஆசி பெற்றுவந்தேன். எங்களுக்கு எல்லோரது ஆசியும் இருக்கிறது. எந்தப் பிரச்சினையும் இல்லை” எனக் கூறியிருந்தார்.

ராஜினாமா குறித்து சூசகப் பேச்சுக்களால் காங்கிரஸ் அரசை அழுத்ததிலேயே வைத்திருக்கிறார். இத்தகைய சூழலில் அவரது தாயாரும், மாநில காங்கிரஸ் தலைவருமான பிரதிபா சிங்கின் பேட்டி மேலும் அழுத்தத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. முன்னதாக இன்று காலை முதல்வர் சுக்வீந்தர் சிங் சுகு எம்எல்ஏக்களுடன் ஆலோசனை நடத்தினார் என்பது கவனிக்கத்தக்கது.