கண்டா வரச் சொல்லுங்க போஸ்டருக்கு பதில் சொன்ன எம்.பி. சு. வெங்கடேசன்!

பல்வேறு விஷயங்களில், தமிழகத்துக்காக, மத்திய அரசிடம் நேரடியாக குரல் கொடுத்து வரும் நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசனைக் காணவில்லை என்று போஸ்டர் ஒட்டியவர்களுக்கு, ஐ ஆம் வெயிட்டிங் என பதிலடி கொடுத்துள்ளார்.

எழுத்தாளரும், அரசியல்வாதியுமான சு. வெங்கடேசன், மதுரை மக்களவை தொகுதியிலிருந்து போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார். தமிழகத்தில் நடைபெறும் பல்வேறு விஷயங்கள் குறித்து மத்திய அரசுக்கு குரல் கொடுத்து, அதனை தீர்ப்பதில் முன்னிலை வகித்து வருபவர். தொடர்ந்து மதுரை மக்களவைத் தொகுதிகளின் பிரச்னைகளை பேசியும், சமூக ஊடகங்கள் வாயிலாக எடுத்துரைத்தும் வருவது வழக்கம்.

இந்த நிலையில், அவரைக் காணவில்லை என்றும், கண்டா வரச் சொல்லுங்க என்று சு. வெங்கடேசனைக் காணவில்லை என்று கூறி போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அதில், எங்க தொகுதி எம்.பி.யை காணவில்லை என மதுரை நாடாளுமன்றத் தொகுதி மக்கள் கேட்பது போல போஸ்டர் ஒட்டப்பட்டிருந்ததைப் பார்த்த வெங்கடேசன்.. ஒன்றும் செய்யவில்லை. அதன் அருகே நின்று புகைப்படம் எடுத்து அதனை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு, காத்திருக்கிறேன் என்று ஆங்கிலத்தில் ஐ ஆம் வெயிட்டிங் என்று பதிவிட்டிருக்கிறார்.
மேலும், கையோடு கூட்டிவாருங்கள் என்று ஹேஷ்டேக்கும் பதிவிட்டுள்ளார்.