பாகிஸ்தானில் ஜப்பானியர்கள் சென்ற வாகனம் மீது தற்கொலைப் படை தாக்குதல்!

பாகிஸ்தானின் கராச்சியில் இன்று (வெள்ளிக்கிழமை) ஜப்பானியர்கள் சென்ற வாகனம் மீது தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானின் கராச்சியில் ஜப்பானியர்கள் சென்ற வாகனம் மீது தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, காவல்துறை நடத்திய பதில் தாக்குதலில் தற்கொலைப் படை தாக்குதல் நடத்திய தீவிரவாதியும், மற்றொரு தீவிரவாதியும் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில், அதிர்ஷ்டவசமாக வாகனத்தில் இருந்த 5 வெளிநாட்டவர்களும் உயிர் தப்பினர்.

பாகிஸ்தானில் இஸ்லாமிய ஆட்சியை அமைக்கப் போராடும் சிலர், கடந்த சில ஆண்டுகளாக சீனர்கள் போன்ற வெளிநாட்டினரை குறிவைத்து தாக்குதல்களை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. உயிர் பிழைத்த ஜப்பானியர்கள் பாதுகாப்பான இடத்துக்கு மாற்றப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலுக்கு எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.