யாத்திரையில் விவசாயிகள், பழங்குடியினரின் வலியை உணர்ந்தேன்: ராகுல்

ஆதிவாசிகளின் நிலங்களைப் பறித்து அவற்றைத் தொழிலதிபர்களுக்கு பாஜக வழங்கியுள்ளது என ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

குஜராத்தில் டிச.,1 மற்றும் 5ம் தேதிகளில் இரு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதற்காக சூரத்தில் தேர்தல் பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் பங்கேற்றார். பழங்குடியினர் பலரும் இப்பொதுக்கூட்டத்தில் பங்கேற்றனர். அப்போது ராகுல் பேசியதாவது:-

இந்தியாவின் பூர்வக்குடிகளான உங்களை ‘வனவாசி’ என காடுகளில் வசிப்பவர்களாக குறிப்பிடுகின்றனர். இதன் வித்தியாசம் புரிகிறதா? அதாவது நீங்கள் நகரங்களில் வசிப்பதை அவர்கள் விரும்பவில்லை. உங்களது பிள்ளைகள் இன்ஜினியராகவோ, டாக்டராகவோ, விமானம் ஓட்டுவதையோ, ஆங்கிலம் பேசுவதையோ பா.ஜ.,வினர் விரும்பவில்லை. அவர்களுக்கு நீங்கள் காடுகளிலேயே வசிக்க வேண்டும் என நினைக்கின்றனர். ஆனாலும், உங்களிடம் இருந்து காடுகளையும், நிலங்களையும் எடுத்துக்கொள்வார்கள். பா.ஜ., அரசு காடுகளை நிறுவனங்களுக்கு விற்கின்றன. இது இப்படியே தொடர்ந்தால், இன்னும் 5-10 ஆண்டுகளில், உங்களின் அனைத்து காடுகளும் நிலங்களும் இரண்டு, மூன்று தொழிலதிபர்களின் கைகளுக்கு வந்துவிடும். அதன்பிறகு உங்களுக்கு இருக்க இருப்பிடம், கல்வி, சுகாதாரம் மற்றும் வேலை எதுவும் கிடைக்காது.

நாட்டின் ஒற்றுமைக்காக நடத்தப்பட்ட பாரத் ஜோடோ யாத்திரையின் போது, ​​விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த மக்களின் பிரச்சனைகளைக் கேட்டறிந்த பிறகு அவர்களின் வலியை உணர்ந்தேன். 70 நாட்களில் 1500 கி.மீ.,க்கு மேல் நடைபயணம் மேற்கொண்டுள்ளோம். இதனால் நாங்கள் சோர்வடையவில்லை. லட்சக்கணக்கானோர் எங்களுடன் சேர்ந்து நடைபயணம் மேற்கொள்கின்றனர். இதுவே ஒற்றுமை யாத்திரை. இவ்வாறு ராகுல் பேசினார்.