சனாதன தர்மத்துக்கு எதிராக பேசுவோரின் நாக்கு பிடுங்கப்படும்: கஜேந்திர சிங் ஷெகாவத்

சனாதன தர்மத்துக்கு எதிராக பேசுபவர்களின் நாக்கு பிடுங்கப்படும் என்று மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் மிரட்டல் விடுத்துள்ளர்.

ராஜஸ்தானின் பார்மர் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், “நமது முன்னோர்கள் தங்கள் உயிரைக் கொடுத்து பாதுகாத்த சனாதன தர்மத்தை, சிலர் ஒழிக்க வேண்டும் என்று பேசி இருக்கிறார்கள். இதை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள முடியாது. அவ்வாறு பேசுபவர்களின் நாக்கு பிடுங்கப்படும்; கண்கள் தோண்டப்படும். சனாதன தர்மத்துக்கு எதிராகப் பேசிவிட்டு இனி ஒருவரும் இந்த நாட்டில் அதிகாரத்தைக் கைப்பற்ற முடியாது” என்று தெரிவித்துள்ளார்.

இதனிடையே, சனாதன தர்மத்துக்கு எதிராக திமுக இளைஞரணி செயலாளரும், தமிழக அமைச்சருமான உதயநிதி பேசியதற்குக் கண்டனம் தெரிவித்துள்ள பாஜக எம்.பி சாத்வி பிரக்யா, “சனாதன தர்மத்தை ஒழிக்கும் வலிமை யாருக்கும் கிடையாது. சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின், நடிகர் பிரகாஷ் ராஜ் போன்றவர்கள் பேசுகிறார்கள். இவ்வாறு பேசுவதால் அவர்கள் கதாநாயகர்களாக ஆக முடியாது; வில்லன்களாகத்தான் ஆவார்கள். உண்மையில் நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்பதை அறியாதவர்கள் அவர்கள். தொழுநோய், மலேரியா, டெங்கு, எய்ட்ஸ் போன்ற நோய்களுடன் சனாதன தர்மத்தை ஒப்பிட்டவர்கள் இந்த நோய்களின் துன்பத்தை அனுபவிக்க வேண்டும். கடவுளிடம் இதையே நான் பிரார்த்திக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.