வந்தே பாரத் ரெயில் கோவில்பட்டியில் நின்று செல்ல வேண்டும்: ஜி.கே.வாசன்

தூத்துக்குடி மாவட்டம் தொழில்துறை நிறைந்த மாவட்டமாக திகழ்கிறது. மக்களுக்கும், வணிகர்களுக்கும் முக்கிய ரெயில் போக்குவரத்து கேந்திரமாக கோவில்பட்டி ரெயில் நிலையம் அமைந்துள்ளது. எனவே வந்தே பாரத் ரெயில் கோவில்பட்டியில் நின்று செல்ல வேண்டும் என்று ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தமிழகத்தில் வந்தே பாரத் ரெயில் சேவை அடுத்தடுத்ததாக தொடங்கவுள்ளது மகிழ்ச்சியை அளிக்கிறது. ஏற்கனவே சென்னை-கோவை இடையேயும், சென்னை-பெங்களுரு இடையேயும் துவங்கப்பட்டு வெற்றிகரமாக இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னையில் இருந்து திருநெல்வெலிக்கு மேலும் புதிதாக வந்தே பாரத் ரெயில் சேவை தொடங்கவுள்ளது மகிழ்ச்சிக்குரியது, வரவேற்கத்தக்கது.

தூத்துக்குடி மாவட்டம் தொழில்துறை நிறைந்த மாவட்டமாக திகழ்கிறது. தூத்துக்குடி மாவட்டத்தின் இரண்டாவது பெரிய நகரமாக கோவில்பட்டி திகழ்கிறது. கோவில்பட்டி மற்றும் அதை சுற்றியுள்ள தென்காசி, சங்கரன்கோவில், திருவேங்கடம், ராஜபாளையம் உள்ளிட்ட மாவட்டத்தை சேர்ந்த மக்களுக்கும், வணிகர்களுக்கும் முக்கிய ரெயில் போக்குவரத்து கேந்திரமாக கோவில்பட்டி ரெயில் நிலையம் அமைந்துள்ளது. கோவில்பட்டி ரெயில் நிலையம் ஆண்டுக்கு சுமார் 30 கோடிவரை வருமானம் ஈட்டித்தந்து “ஏ” கிரேடு அந்தஸ்த்தில் உள்ளது.

இவ்வாறு பல்வேறு சிறப்புகளையும், வணிக போக்குவரத்து மையமாகவும் திகழும் கோவில்பட்டி ரெயில் நிலையத்தில் தற்பொழுது இயக்க இருக்கின்ற வந்தே பாரத் ரெயில், கோவில்பட்டி ரெயில் நிலையத்தில் நின்று செல்ல உரிய நடவடிக்கையை மத்திய அரசும், மத்திய ரெயில்வே நிர்வாகமும் எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.