ஜப்பான் கடலில் விழுந்து நொறுங்கிய அமெரிக்க ராணுவ விமானம்!

8 பேருடன் சென்ற அமெரிக்க ராணுவத்தின் ஆஸ்பிரே ரக விமானம், ஜப்பானின் மேற்கு பகுதியில் உள்ள யாகுஷிமா தீவு அருகே இன்று பிற்பகல் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்து குறித்து மீனவர்கள், ஜப்பான் கடலோர காவல் படைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து கடலோர காவல் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர். பிற்பகல் 3 மணியளவில் இந்த விபத்து நடைபெற்றதாக கூறப்படுகிறது. விமானத்தின் இடது இயந்திரம் கீழே இறங்கும் போது தீப்பிடித்ததாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன. ஆஸ்ப்ரே விமானத்தை இயக்கும் ஜப்பான், புதனன்று விமானத்தை தரையிறக்கும் திட்டம் எதுவும் இல்லை என கூறியிருக்கும் நிலையில், இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

ஹெலிகாப்டர் மற்றும் ரோந்து படகுகள் மூலம் மாயமானவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருவதாகவும், அப்பகுதியில் தேடியபோது ஒருவர் மட்டும் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விமானத்தின் உடைந்த பாகங்களும் கண்டறியப்பட்டுள்ளதாகவும், அவை விபத்துக்குள்ளான விமானத்தின் பாகங்களாக இருக்கலாம் என நம்பப்படுகிறது. மீட்கப்பட்டவரின் நிலை, மற்றவர்கள் என்ன ஆனார்கள்? என்பது குறித்த தகவல் எதுவும் தற்போது வரை வெளியாகவில்லை.

இதுபற்றி ஜப்பான் கடலோர காவல் படை செய்தி தொடர்பாளர் கூறுகையில், “யமகுச்சி மாகாணத்தில் உள்ள அமெரிக்க மரைன் கார்ப்ஸ் விமான நிலையமான இவாகுனி நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம், ஒகினாவாவில் உள்ள கடேனா விமான தளம் நோக்கி சென்றபோது விபத்துக்குள்ளானது. கடலில் விழுவதற்கு முன்பாக, யாகுஷிமா விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கவும் முயற்சி செய்யப்பட்டது” என்றார்.