'பில்லா 2' படத்தின் டிரைலருக்கு பெரும் வரவேற்பு இணையத்தில். பல லட்சம் பேர் பார்த்த வீடியோவாக மாறியுள்ளது இந்த ட்ரைலர். வெளியான சில மணி நேரங்களில் 4 லட்சம் பேர் பார்த்துவிட்டார்கள். இந்த வீடியோவில் ரசிகர்களை உறைய வைத்தது அஜித்தின் மயிர்க்கூச்செரியும் சண்டைக் காட்சிகள். மிக உயரத்தில் பறக்கும் ஹெலிகாப்டரில், கயிறுகூட கட்டிக் கொள்ளாமல் திறந்த கதவருகே நின்றபடி அஜித் போடும் சண்டைக் காட்சி அது. நானும் எத்தனையோ படங்களுக்கு ஸ்டண்ட் அமைத்துள்ளேன். ஆனால் இந்த அளவு ரிஸ்க் எடுத்த முன்னணி நடிகரை பார்த்ததில்லை. மைனஸ் டிகிரி குளிரில், உயரப் பறக்கும் ஹெலிகாப்டரிலிருந்து குதித்த அஜித், ஒரு கையால் ஹெலிகாப்டரின் கம்பியைப் பிடித்து தொங்கியபடி சண்டை போட்டது என்னை அதிர்ச்சியில் உறைய வைத்தது. சினிமா வரலாற்றிலேயே எந்த நடிகரும் எடுக்காத ரிஸ்க் இது என அவருக்கு ஸ்டண்ட் அமைத்துக் கொடுத்த இயக்குநர் கீசா காம்பக்தீ வியப்பு தெரிவித்துள்ளார். மிரட்டிட்டீங்க போங்க....... இனி ஒங்க ஃபேன்ஸ் தூங்க மாட்டாங்களே......
தமிழில் சிறந்த கதையை எதிர்பார்த்திருப்பதாக, ரிச்சா கங்கோபாத்யாய் கூறினார். அவர் மேலும் கூறியதாவது: தமிழில், தனுஷுடன் 'மயக்கம் என்ன', சிம்புவுடன் 'ஒஸ்தி' படங்களில் நடித்தேன். இந்தப் படங்கள் என்னை தமிழ் ரசிகர்களிடம் கொண்டு சேர்த்திருக்கின்றன. இந்தப் பட ஷூட்டிங்கின் போது சிம்புவும், தனுஷும் தமிழ் பேசுவதற்கு உதவி செய்தனர். இருவரும் பல்வேறு திறமைகளை கொண்ட நடிகர்கள். இருவருடனும் நடித்ததை பெருமையாக நினைக்கிறேன். இப்போது எனது தாய்மொழியான பெங்காலியில் 'பிக்ரம் சிங்கா' படத்தில் நடித்துள்ளேன். இது தமிழில் வெளியான 'சிறுத்தை' படத்தின் ரீமேக். பெங்காலிக்காக கதையில் மாற்றம் செய்துள்ளனர். தாய்மொழியில் நடிப்பது எப்போதும் சுகமானது. தெலுங்கில் பிரபாஸூடன் 'வாராதி' என்ற படத்தில் நடித்துவருகிறேன். தமிழில் அடுத்த படம் என்ன என்கிறார்கள். ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கேரக்டரில் நடித்துவருகிறேன். தமிழிலும் அப்படித்தான் எதிர்பார்க்கிறேன். நடித்த கேரக்டரிலேயே நடிக்க எனக்கு உடன்பாடில்லை. இதுவரை எட்டு கதைகள் கேட்டேன். எனக்கு திருப்தியாக இல்லாததால் நிராகரித்தேன். இந்த செர்ரி அம்புட்டு பிஸியாகிடுச்சா....?
'3' படத்தில் தனுஷுக்கு நண்பனாக சிவகார்த்திகேயன் நடித்து அசத்தினார். இவர்களது கூட்டணி செம காமெடியாக இருந்தது. இதனையடுத்து, வெற்றிமாறனின் அசிஸ்டெண்ட் செந்தில்தான் இயக்கும் படத்தை தனுஷ் தயாரிக்கிறார். ரொமாண்டிக் காதல் கதையான இந்த படத்தில் சிவகார்த்திகேயனை ஹீரோவாக்கியிருக்கிறார் தனுஷ். விரைவில் அதிகாரப்பூர்வமாக இந்தப் படத்தை அறிவிக்கிறார் தனுஷ். பரவாயில்ல... ஈகோ இல்லாம நண்பன தூக்கி விட நெனைக்கிறாரே. ஒருவேள.... இதுல சைக்கோ கேரக்டர் இல்லையோ என்னவோ?
'நாடோடிகள்', 'போராளி' படங்களுக்குப் பிறகு, அதிரடி ஆக்ஷன் ஹீரோவாக சசிகுமார் நடிக்கும் படம் 'சுந்தரபாண்டியன்'. இந்தப் படத்தை இயக்குபவர், சசிகுமாரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய பிரபு. சசிகுமாரின் ஜோடியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் லட்சுமி மேனன். இவர் 'கும்கி' படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக நடித்துள்ளார். விஜய் சேதுபதி, சூரி உள்பட பலரும் நடிக்கின்றனர். ரகுநந்தன் இசையமைக்கிறார். இந்தப் படத்தை தயாரிக்கப் போவது வேறுயாருமில்லை... சசிகுமாரேதான். தனது கம்பெனி புரொடக்ஷன் சார்பில் இந்தப் படம் உருவாகிறது. பிரபு சொன்ன கதை அந்த அளவு பிடித்துப் போனதால் தானே நடித்து, தயாரிக்கவும் முன்வந்தாராம் சசிகுமார். தேனி மற்றும் காரைக்குடி உள்ளிட்ட பகுதிகளில் முழுப் படப்பிடிப்பும் நடக்கிறது. ரொம்ப அழகாகிடுவாரோ.....?
பாலிவுட் நடிகர் அமீர்கான் நடித்த, 'த்ரீ இடியட்ஸ்' இந்தி படத்தின் விளம்பரத்தின்போது, ஆட்டோ டிரைவர் ராம் லக்கன் பஸ்வான் என்பவரது நட்பு அமீர்கானுக்கு கிடைத்தது. இதையடுத்து, "தன் மகன் ராஜிவ் திருமணத்தில் கலந்து கொள்ள வேண்டும்' என, ஆட்டோ டிரைவர் கேட்டுக் கொண்டார். திருமணத்தில் நிச்சயம் கலந்துகொள்கிறேன் என, அமீர்கான் உறுதி அளித்தார். ஓராண்டுக்கு முன் அளித்த உறுதிமொழியை நினைவில் வைத்திருந்த அமீர்கான் மறக்காமல், உத்தரபிரதேசம் வாரணாசியில் நடந்த அந்த திருமணத்திற்காக புதன்கிழமை நள்ளிரவு அங்கு சென்றார். முதலில் தன் மாமா வீட்டுக்கு சென்ற அவர், பின்னர் திருமணம் நடந்த மெக்முர்கஞ்ச் சாருயாஸ்யா மண்டபத்திற்கு சென்றார். அவர் வருவதை முன்கூட்டியே அறிந்திருந்த பத்திரிகையாளர்களும், பொதுமக்களும் அங்கு திரண்டனர். இதனால், அங்கு குழப்பம் நீடித்தது. மேலும், அவர் நின்றிருந்த மேடை திடீரென சரிந்தது. பதட்டமடையாத அமீர்கான் சமாளித்து மேடையிலேயே நின்றார். தொடர்ந்து, நிருபர்களிடம் பேசிய அமீர்கான், "ஆட்டோ டிரைவர் என் நண்பர். அவரது மகன் ராஜிவ் விஜியதா திருமணத்தில் கலந்துகொண்டது மகிழ்ச்சி அளிக்கிறது. திருமணத்தில் கலந்துகொள்ளவே இங்கு வந்தேன். வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க அல்ல" என்றார். மண மேடையில் மணமக்களுடன் நல்ல மனசுகளையும் பார்க்க முடியுதே.....